ஏர்வாடி அருகே பரபரப்பு தி.மு.க.-ம.தி.மு.க. நிர்வாகிகள் திடீர் மோதல்; கார் கண்ணாடி உடைப்பு 11 பேர் மீது வழக்கு

ஏர்வாடி அருகே தி.மு.க.- ம.தி.மு.க. நிர்வாகிகள் திடீரென மோதிக் கொண்டனர். இதில் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

Update: 2022-08-02 22:18 GMT

ஏர்வாடி:

ஏர்வாடி அருகே தி.மு.க.- ம.தி.மு.க. நிர்வாகிகள் திடீரென மோதிக் கொண்டனர். இதில் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

கருத்து வேறுபாடு

நெல்லை மாவட்டம் ஏா்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடி பேரூராட்சியில் கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது தி.மு.க. நிர்வாகிகளுக்கும், அதன் கூட்டணி கட்சியான ம.தி.மு.க. நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் திருக்குறுங்குடி பேரூராட்சி 7-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு ம.தி.மு.க., தி.மு.க.வை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. இதனைதொடர்ந்து இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும், சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை வெளியிட்டு வருவதாகவும் தெரிகிறது.

கார் கண்ணாடி உடைப்பு

இந்த நிலையில் சம்பவத்தன்று திருக்குறுங்குடி மேலரதவீதி சந்திப்பில் நின்று கொண்டிருந்த ம.தி.மு.க. நிர்வாகிகளுக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே திடீர் என வாய்த்தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் களக்காடு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வகருணாநிதியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த திருக்குறுங்குடி போலீசார் மற்றும் கட்சி பிரமுகர்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

11 பேர் மீது வழக்கு

இந்த சம்பவம் தொடர்பாக திருக்குறுங்குடி போலீசார், செல்வகருணாநிதி, ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே, இருகட்சியினரும் மோதிக் கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்