நாக அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

தென்பசியார் நாகஅங்காளம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-08-16 18:55 GMT

திண்டிவனம்

அமாவாசை திருவிழா

திண்டிவனம் அருகே உள்ள தென்பசியார் கிராமத்தில் அமைந்துள்ள சுயம்பு நாக அங்காளம்மன் கோவிலில் வருடந்தோறும் ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் 10-ம் ஆண்டு திருவிழா கடந்த 5-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், நேற்று கன்னிமார் கோவிலுக்கு கரக புறப்பாடு, பால்குடங்களுடன் கரக வீதியுலா, அம்மனுக்கு கூழ் வார்த்தல், ஊரணி பொங்கல், அலகு குத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தீமிதி திருவிழா

பின்னர் மாலை 6 மணிக்கு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் கோவில் அருகில் உள்ள அக்னி குண்டத்தில் திரளான பக்தர்கள் அலகு குத்தி கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கதிர்வேல், ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் கஜலட்சுமிராம்குமார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை சக்தி உபாசகர் ராம்குமார், அருள்வாக்கு சித்தர் அசோக்ராஜ் அடிகளார், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

விழாவை தொடர்ந்து இன்று(வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்