சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கடற்கரையில் திரண்டு உற்சாகமாக பொழுதை போக்கினர்.

Update: 2022-10-30 18:45 GMT

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கடற்கரையில் திரண்டு உற்சாகமாக பொழுதை போக்கினர்.

கூட்டம் அலைமோதல்

சர்வதேச சுற்றுலாதலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அதிலும் விடுமுறை நாள் என்றால் முதல் நாள் நள்ளிரவில் இருந்தே சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கி விடுவார்கள்.

அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்தே சுற்றுலா பயணிகள் வந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

கடற்கரையில் உற்சாகம்

அதிகாலையில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் சூரியன் உதயமாகும் காட்சியை காண குவிந்தனர்.

ஆனால் வானம் மேகமூட்டமாக இருந்ததால் சூரியன் உதயமான காட்சியை தெளிவாக பார்க்க முடியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பிறகு சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்க்க படகுத்துறைக்கு சென்றனர். அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை ரசித்து பார்த்தனர்.

அதன்பிறகு காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களுக்கும் சென்று பார்த்தனர். மாலையில் கடற்கரையில் திரண்ட சுற்றுலா பயணிகள் கடலின் இதமான காற்றை உற்சாகமாக அனுபவித்தனர்.

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியதால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்