சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது

வார விடுமுறைையயொட்டி நேற்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கடல் நீர்மட்டம் தாழ்வால் படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது.

Update: 2023-08-20 18:45 GMT

கன்னியாகுமரி:

வார விடுமுறைையயொட்டி நேற்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கடல் நீர்மட்டம் தாழ்வால் படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது.

சுற்றுலா பயணிகள் கூட்டம்

கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நேற்று அதிகாலையிலேயே கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அங்கு ஆர்வத்துடன் சூரியன் உதயமாகும் காட்சியை கண்டு ரசித்தனர். பலர் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்ததையும் காணமுடிந்தது.

பின்னர் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

படகு போக்குவரத்து தாமதம்

கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் தயாராக இருந்தனர். ஆனால் கடல்நீர்மட்டம் தாழ்வு காரணமாக காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

காலை 11 மணிக்கு கடல் இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து 3 மணி நேரம் தாமதமாக படகு சவாரி தொடங்கியது. அதில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர். ஆனால் வட்டக்கோட்டைக்கு இயக்கப்படும் உல்லாசப்படகு இயக்கப்படவில்லை.

இதேபோல் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், அரசு பழத்தோட்டம் உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்