கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்: காட்டுமன்னார்கோவிலில் 21 பேர் கைது

கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காட்டுமன்னார்கோவிலில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 21 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-04 19:00 GMT

காட்டுமன்னார்கோவில்,

கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ம.ஆதனூர் கிராமத்தில் சுவாமி நந்தனார் குருபூஜை விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மார்க்சியத்தை அவதூறாக பேசி வருவதை கண்டித்தும் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தெரிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று காலை 9.30 மணியளவில் காட்டுமன்னார்கோவிலில் உள்ள பெரியகுளம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ் தலைமை தாங்கினார். வட்ட குழு உறுப்பினர்கள் இளங்கோவன், புகழேந்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கருப்பு கொடி ஏந்தியவாறு கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

21 பேர் கைது

இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 21 பேரை காட்டுமன்னார்கோவில் போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். அதன்பின்னர் காலை 11 மணியளவில் சுவாமி நந்தனார் குருபூஜை விழாவில் கலந்து கொள்வதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டு சென்றார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்