ரூ.50 ஆயிரம் இழப்பீடாக வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

தனி பட்டா வழங்க தாமதமானதால் ரூ.50 ஆயிரம் இழப்பீடாக வழங்க வருவாய்த் துறையினருக்கு வேலூர் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-06-30 18:25 GMT

பட்டா வழங்குவதில் தாமதம்

காஞ்சீபுரம் கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கு சொந்தமாக நெமிலி தாலுகா ஓச்சேரி கிராமத்தில் நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு தனிப்பட்டா கேட்டு கடந்த 2021-ம் ஆண்டு விண்ணப்பித்தார். அதற்கான சேவை கட்டணத்தையும் செலுத்தினார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து அவர் நெமிலி தாசில்தாரிடம் கேட்டுள்ளார். ஆனால் முறையான பதில் ஏதும் இல்லை.

இதையடுத்து வேலூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தனிபட்டா கேட்டு அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பித்தார். வழக்கினை நீதிபதி மீனாட்சிசுந்தரம் விசாரணை நடத்தி வந்தார்.

ரூ.50 ஆயிரம் இழப்பீடு

அதில் சிவகுமாரின் மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். எனினும் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில், சேவை குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.

அதைத்தொடர்ந்து அதில் நிலத்தை அளந்து தனிப்பட்டா வழங்க வேண்டும். சேவை குறைபாடு காரணமாகவும், அவருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காகவும் இழப்பீடாக ரூ.25 ஆயிரத்தை குற்றம் புரிந்த அலுவலரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து வழங்க வேண்டும் என்றும், மேலும் வழக்கு செலவு தொகையாக ரூ.25 ஆயிரத்தையும் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்