நாகங்குடி சாலையில் புதிய தரைப்பாலம் கட்டும் பணி தொடங்கியது

நாகங்குடி சாலையில் புதிய தரைப்பாலம் கட்டும் பணி தொடங்கியது

Update: 2023-04-28 18:45 GMT

'தினத்தந்தி' செய்தி் எதிரொலியாக நாகங்குடி சாலையில் புதிய தரைப்பாலம் கட்டும் பணி தொடங்கியது.

தரைப்பாலம் பழுது

கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் சாலையில் நாகங்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தையொட்டிய சாலையின் குறுக்கே அந்த பகுதி விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வெண்ணாற்றில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு செல்வதற்காக நாகங்குடி பாசன வாய்க்கால் மதகு அமைக்கப்பட்டு, சாலையின் மேல்பகுதியில் தரைப்பாலம் கட்டப்பட்டது. பாசன வாய்க்கால் மதகு மற்றும் தரைப்பாலம் பழுதடைந்து காணப்பட்டது.

இதனால் தரைப்பாலம் தடுப்பு சுவர் மற்றும் தரைப்பாலம் இடிந்து விழும் நிலையில் இருந்தது. மேலும் பழுதடைந்த பாசன வாய்க்கால் மதகு மற்றும் தரைப்பாலம் அமைக்கப்பட்ட இடம் ஆபத்தான வளைவு என்பதாலும், குறுகலான தரைப்பாலம் என்பதாலும் இந்த வழித்தடத்தில் சென்று வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள் மற்றும் கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கனரக வாகனங்கள் பழுதடைந்த பாசன வாய்க்கால் தரைப்பாலத்தை கடந்து சென்று வர மிகவும் சிரமம் அடைந்தன.

கோரிக்கை

குறுகலான தரைப்பாலம் சாலையோரத்தில் சரிந்து விழும் நிலையில் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடனே வாகனங்களை ஓட்டிச்சென்று வந்தனர். இதனையடுத்து பழுதடைந்த பாசன வாய்க்கால் மதகு மற்றும் தரைப்பாலத்தை அகற்றி விட்டு அதே இடத்தில் அகலமான தரைப்பாலம் கட்டித்தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள், விவசாயிகள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

தரைப்பாலம் கட்டும் பணி

இதுகுறித்து 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பழுதடைந்த தரைப்பாலத்தை அகற்றி விட்டு அதே இடத்தில் புதிதாக அகலமான தரைப்பாலம் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அகலமான தரைப்பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அந்த பகுதி மக்கள், விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்