புகார்பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-08-24 17:37 GMT

கால்வாய் சீரமைக்கப்படுமா?

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் பருவ மழை தொடங்கும் முன்பாக கண்மாய்களுக்கு வரும் வரத்து கால்வாய்களை சீரமைத்தால் மழைநீரை சேகரிக்க முடியும். எனவே, அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும்.

பொதுமக்கள், எஸ்.புதூர்.

தெருநாய்கள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணாநகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் வெளியே வர மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் வாகனங்களின் மீது தெருநாய்கள் மோதுவதால் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், காரைக்குடி.

சாலை வசதி வேண்டும்

சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் பேரூராட்சி உட்பட்ட எழில் நகர், தென்றல் நகர் போன்ற பகுதிகளில் உள்ள சாலைகள் மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்கு ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிருந்தாவன், கோட்டையூர்.

வீணாகும் குடிநீர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து பட்டமங்கலம் செல்லும் சாலையில் தென்மாப்பட்டில் உள்ள காவிரி குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் காவிரி தண்ணீர் வந்தும் பொதுமக்களுக்கு பயன்படாத வகையில் வீணாக செல்கிறது. எனவே உடைந்த குழாயை சரிசெய்து காவிரி குடிநீர் கிடைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆறுமுகம் சேதுராமன், தென்மாப்பட்டு.

சேதமடைந்த மின்கம்பங்கள்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நேரு தெருவில் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இந்த மின்கம்பங்களால் இப்பகுதியில் உள்ள மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபரீதம் ஏதும் நிகழ்வதற்கு முன்னர் புதிய மின்கம்பங்களை அமைக்க வேண்டும்.

மாணிக்கம், தேவகோட்டை.

Tags:    

மேலும் செய்திகள்