பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் குறித்து புகார் அளிக்கலாம் - மாசு கட்டுப்பாட்டு வாரியம்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த 240 தொழிற்சாலைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூடியுள்ளது.

Update: 2024-10-03 23:40 GMT

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்றவை தயாரிக்கப்படுவதும், சேமித்து வைப்பதும், வினியோகிப்பதும், விற்பதும், உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல 100 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் அல்லது பி.வி.சி. விளம்பர பதாகைகள், முட்கரண்டி, கரண்டிகள், கத்திகள், உறிஞ்சு குழாய்கள், தட்டுகள் மற்றும் அழைப்பிதழ்கள், சிகரெட் பாக்கெட்டுகள் மேல் சுற்றப்பட்டுள்ள பிளாஸ்டிக் தாள்கள் போன்ற தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கும் தடை செய்துள்ளது. இதுவரை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த 240 தொழிற்சாலைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூடப்பட்டுள்ளது.

எனவே, சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு அருகில் குடியிருப்பவர்கள் சட்டவிரோதமாக இயங்கும் தொழிற்சாலைகள் பற்றிய விவரங்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு தெரிவிக்கலாம். அதுதொடர்பான விவரங்கள் https://tnpcb.gov.in/contact.php என்ற வாரியத்தில் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்களை மின்னஞ்சல், கடிதம், தொலைபேசி மற்றும் வாட்ஸ்-அப் மூலம் பதிவு செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்