கல்லூரி மாணவர்கள் சாலைமறியல்

அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து கல்லூரி மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்

Update: 2022-10-06 18:45 GMT

குத்தாலம்:

குத்தாலத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. நிரந்தர கட்டடம் கட்டப்படாமல் திறக்கப்பட்டதால் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. தற்போது குத்தாலம் அருகே மாதிரிமங்கலம் கிராமத்தில் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிக்கு போதுமான இடவசதி இல்லை, அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்பதை வலியுறுத்தி கடந்தவாரம் கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன்பு வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வகுப்பறையில் இடப்பற்றாக்குறை காரணமாக கல்லூரி கட்டிடத்தின் மாடியில் அமைக்கப்பட்டுள்ள தகரஷெட்டின் கீழ் மாணவர்கள் அமர்ந்து படித்து வந்துள்ளனர். அந்த இடத்தை கல்லூரி முதல்வர் பாதுகாப்பு காரணங்களை காட்டி நேற்று பூட்டியுள்ளார். கல்லூரிக்கு வந்த மாணவர்கள் மாடி பூட்டப்பட்டிருந்ததை கண்டும், அமர்ந்து படிப்பதற்கு வகுப்பறை இல்லாததை கண்டித்தும், தரக்குறைவாக நடத்தும் கல்லூரி முதல்வரை கண்டித்தும், கல்லூரி முன்பு மயிலாடுதுறை-கும்பகோணம் பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர்அமுதாராணி தலைமையிலான போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவித்து விரைவில் நிரந்தர தீர்வு காண ஏற்பாடு செய்வதாக உறுதியளிக்கப்பட்டது. பின்னர் மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்