கோவை சட்டக் கல்லூரி நிர்வாகத்தின் அத்துமீறலுக்கு கண்டனம் - முத்தரசன்

கோவை சட்டக் கல்லூரி நிர்வாகத்தின் எதிர்மறை நடவடிக்கைகளால் போராடும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்று முத்தரசன் கூறியுள்ளார்.

Update: 2023-02-22 08:10 GMT

சென்னை,

கோவை சட்டக் கல்லூரி நிர்வாகத்தின் எதிர்மறை நடவடிக்கைகளால் போராடும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவை சட்டக் கல்லூரியில் இளநிலைப் படிப்பு முடித்த மாணவி ஹரிதா, கல்லூரியில் சேரும் போது, நிர்வாகத்திற்கு வழங்கிய தனது "மாற்றுச் சான்றிதழ்" கேட்டு விண்ணப்பித்துள்ளார். மாற்றுச் சான்றிதழை வழங்கி, மாணவியின் உயர்கல்விக்கு உதவ வேண்டிய கல்லூரி நிர்வாகம் "மாற்றுச் சான்றிதழ்" அலுவலகத்தில் இல்லை என "கை" விரித்து, பொறுப்பற்ற செயலில் ஈடுபட்டுள்ளது.

இது குறித்து கேள்வி எழுப்பிய மாணவர்கள் மீது பொய் வழக்கு போடுவது, தற்காலிக நீக்கம் செய்வது உட்பட அடக்குமுறை நடவடிக்கைகள் ஏவப்பட்டு வருகிறது. இதனால் சட்டக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பதற்றம் நிலவி வருகிறது. கல்லூரி நிர்வாகத்தின் எதிர்மறை நடவடிக்கைகளால் போராடும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தப் பிரச்சினையில் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு மாணவர்கள் உரிமையை பாதுகாத்து, சுமூக சூழலை உருவாக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்