செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்

கரூர் அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-08-17 17:39 GMT

செல்போன் கோபுரம்

கரூர் மாவட்டம், நடையனூர் அருகே இளங்கோ நகர் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்கள் விவசாயத்தை நம்பி குடும்பம் நடத்தி வருகின்றனர். தற்போது இந்த ஊரில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிக்கு மத்தியில் அப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான இடத்தில் தனியாருக்கு சொந்தமான செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த கோபுரத்தில் இருந்து ஏற்படும் கதிர்வீச்சினால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் கதிர்வீச்சினால் விவசாய நிலமும் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று கூறி செல்போன் கோபுரம் அமைக்க கூடாது என மாவட்ட கலெக்டரிடம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுத்து உள்ளனர். ஆனால் அந்த மனு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். மேலும், காற்று காலங்களில் திடீரென செல்போன் கோபுரம் முறிந்து விழுந்தாலும் மிகவும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே செல்போன் கோபுரம் அமைப்பதை நிறுத்த வேண்டும் எனக்கூறி வேலாயுதம்பாளையம்- நொய்யல் செல்லும் சாலையில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போலீசார் உங்களது கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்