புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் கண்ணன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

முன்னாள் சபாநாயகர் கண்ணன் மறைவு புதுவை அரசியலில் எளிதில் ஈடுசெய்ய இயலாத இழப்பு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2023-11-06 05:47 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் கண்ணன் காலமானார். அவருக்கு வயது 74. நுரையீரல் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் சபாநாயகர் கண்ணன், புதுச்சேரி மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். இதனிடையே, கண்ணனின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதி சடங்கு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் கண்ணன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "புதுவை மாநில முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரும்- அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பல்வேறு பொறுப்புகளில் மக்களுக்காகப் பணியாற்றியவருமான புதுவை கண்ணன் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்றறிந்து மிகவும் வருந்துகிறேன்.

காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக இளம்வயது முதல் பணியாற்றிய கண்ணன் அவர்கள், கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு புதுவை மக்களிடையே பெரிதும் பிரபலமும் செல்வாக்கும் நன்மதிப்பும் கொண்ட தலைவராகத் திகழ்ந்து வந்தவர் ஆவார். அவரது மறைவு புதுவை அரசியலில் எளிதில் ஈடுசெய்ய இயலாத இழப்பு ஆகும். அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், அரசியல் உலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்