காரில் 90 கிலோ கஞ்சா கடத்திய வழக்கு:4 பேருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை- மதுரை கோர்ட்டு தீர்ப்பு

காரில் 90 கிலோ கஞ்சா கடத்தி வந்த நான்கு பேருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.

Update: 2023-09-07 20:49 GMT


காரில் 90 கிலோ கஞ்சா கடத்தி வந்த நான்கு பேருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.

காரில் கஞ்சா கடத்தல்

கடந்த 2020-ம் ஆண்டில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வருவதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பல்வேறு பகுதிகளில் போலீசார் வாகன சோதனைகளில் ஈடுபட்டனர். அதேபோல திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் கள்ளிமந்தயம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த காரில் 90 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

4 பேர் கைது

அதை போலீசார் பறிமுதல் செய்ததுடன், காரில் வந்த 4 பேரிடம் விசாரித்தனர்.

தேனி மாவட்டம் வருசநாடு குமணன் தொழு பகுதியைச் சேர்ந்த கண்ணன் (வயது 32), அழகர்ராஜா (30), கோம்பையை சேர்ந்த அறிவழகன் (34), வருசநாடு அரண்மனை பகுதியை சேர்ந்த ஜீவா (36) ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட 2-வது போதை பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் ஆர்.வி.பாரிராஜன் ஆஜரானார்.

12 ஆண்டு சிறை தண்டனை

விசாரணை முடிவில், மேற்கண்ட 4 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.

இதையடுத்து அவர்கள் 4 பேருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், 4 பேருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஹரிஹர குமார் தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்