கொங்கு மண்டலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இரும்பு கோட்டை; அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

கொங்கு மண்டலம் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இரும்பு கோட்டை என்று ஈரோட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

Update: 2023-02-05 21:32 GMT

கொங்கு மண்டலம் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இரும்பு கோட்டை என்று ஈரோட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

தீவிர வாக்குசேகரிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து, ஈரோடு கிருஷ்ணம்பாளையம் காலனி, ஜீவா நகர் பகுதியில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் அவர் தி.மு.க. அரசின் சாதனைகளை பட்டியலிட்டு கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

வாக்கு சேகரிப்பில் கூடும் மக்களை பார்க்கும்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 1½ ஆண்டு ஆட்சியின் வெற்றியை காட்டுகிறது. சட்டசபை தேர்தல் மட்டுமின்றி, இறுதியாக நடந்த உள்ளாட்சி தேர்தலில் கூட எத்தனை மாநகராட்சிகளில், உள்ளாட்சி அமைப்புகளில் அவர்கள் வெற்றி பெற்றார்கள் என சொல்லுங்கள். ஈரோடு மாநகராட்சியில் கூட எத்தனை வார்டுகளை அந்த கட்சி வென்றது. அவர்களது ஆட்சியில் நகர்புற உள்ளாட்சி தேர்தலே நடக்கவில்லை.

இரும்பு கோட்டை

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் தான் மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தி கவுன்சிலர்கள் மக்கள் பணியாற்றும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளனர். கொங்கு மண்டலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இரும்பு கோட்டை. மார்ச் மாதம் 2-ந்தேதி கை சின்னம் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என பாருங்கள். ஈரோட்டில் ரோடுகள் சரி இல்லை என்பது, கடந்த 1½ ஆண்டில் வந்த பிரச்சினை இல்லை. பல ஆண்டுகளாக போடப்படாத ரோடுகள். மக்கள் கோரிக்கை வைத்ததால் நிதி ஒதுக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்ததும், பணிகள் அனைத்தும் தொடங்கும்.

இல்லாத அண்ணாமலையை பற்றி என்ன கருத்து சொல்ல. அவர்களது கட்சியில் எவ்வளவு உறுப்பினர்கள் உள்ளார்கள் என கேளுங்கள். தி.மு.க.வில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளார்கள் என கூறுகிறோம். அவர்கள் மிஸ்டு கால் பார்ட்டி. அவர்கள் இந்த தேர்தலில் எத்தனை பூத் கமிட்டி போட்டுள்ளார்கள். அதில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளார்கள் என சொல்லட்டும்.

50 சதவீத காலிப்பணியிடங்கள்

அதேநேரம் நாங்கள் 238 வாக்குச்சாவடியிலும் பூத் கமிட்டி அமைத்து, வாக்காளர்கள் பட்டியலை சரி பார்த்துவிட்டோம். சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதியில் 85 சதவீத வாக்குறுதிகளை கடந்த 1½ ஆண்டுகளில் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார். மீதமுள்ள அனைத்து வாக்குறுதிகளும் படிப்படியாக கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என அவர் கூறி உள்ளார்.

மாதம் ஒரு முறை மின் கட்டணம் கணக்கீடு சாத்தியமில்லை என நான் கூறவில்லை. முதல்-அமைச்சர் அதை விரைவில் நிறைவேற்றுவார். கணக்கெடுப்பு செய்யக்கூடிய பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. 50 சதவீதம் காலிப்பணியிடமாக உள்ளது. அதனை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

ஸ்மார்ட் மீட்டர்

ஸ்மார்ட் மீட்டர் அமைப்பதற்காக டெண்டர் விடும் பணிகள் நடந்து வருகிறது. ஸ்மார்ட் மீட்டர் போட்டுவிட்டால், நீங்களே அப்போதும் ஒரு கேள்வி கேட்பீர்கள். ஸ்மார்ட் மீட்டர் அமைத்ததால், கணக்கீட்டாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்கப்படுமா என கேட்பீர்கள்.

இந்த இரண்டில் எது முக்கியம் என்பதை கவனத்தில் கொண்டு நிறைவேற்றப்படும். சில வழிகாட்டுதலுடன், மாதாந்திர மின் கட்டண முறை அமல்படுத்தப்படும். இந்த பகுதியில் விசைத்தறி அதிகம் உள்ளது. கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் மின் கட்டணம் உயர்த்தாததுபோல் மாய தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.

மின் கட்டணம் உயர்வு

கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் 600 யூனிட் மின்சாரத்தை வீடுகளில் பயன்படுத்தியவர்கள் ரூ.1120 செலுத்தினார்கள். 2017-ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சியில் 600 யூனிட்டுக்கு ரூ.2440 ஆக உயர்த்தப்பட்டது. இதுபோல் ஒவ்வொரு துறையிலும் உயர்த்தி உள்ளனர். அதை கணக்கிட்டு பாருங்கள்.

தற்போது விசைத்தறிக்கு இலவச மின்சாரம் 750 யூனிட்டில் இருந்து 1,000 யூனிட்டாகவும், கைத்தறிக்கு 200 யூனிட்டில் இருந்து 300 யூனிட்டாகவும் உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

அப்போது அவருடன் அந்தியூர் எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம், தி.மு.க. நெசவாளர் அணி மாநில செயலாளர் சச்சிதானந்தம், தலைமை பேச்சாளர் இளையகோபால் உள்பட பலர் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்