தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது; ஆபத்தான நிலையில் கடக்கும் மாணவர்கள்

தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது

Update: 2022-08-05 18:22 GMT

திருப்புவனம்

திருப்புவனம் அருகே ஓடாத்தூர் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் ஆபத்தான நிலையில் மாணவர்கள் கடந்து சென்று வருகின்றனர்.

தரைப்பாலம்

திருப்புவனம் யூனியனை சேர்ந்தது பழையனூர். பழைய னூரில் இருந்து ஓடாத்தூருக்கு கிருதுமால் நதியின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று செல்கிறது. பெரும் மழை காலங்களிலும், வைகையாற்றில் தண்ணீர் அதிகமாக வரும் காலங்களில் இந்த தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி கிருதுமால் நதி செல்லும். பழையனூரை சுற்றி 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இந்த பழையனூருக்கு வரும் தரைப்பாலம் சேதமடைந்து காணப்பட்டு வருகிறது. இந்த பகுதியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் பல ஆண்டு களாக இந்த பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

தற்போது கிருதுமால் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் கிருதுமால் நதியை கடந்து ஆபத்தான நிலையில் பழையனூரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

கோரிக்கை

மேலும் பெரும் மழை பெய்து இந்த கிருதுமால் நதியில் தண்ணீர் அதிகஅளவில் வரும்பட்சத்தில் மாணவர்கள் தங்களது இடுப்பு அளவிற்குமேல் நனைந்தபடி பள்ளிக்கு வந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. சில மாணவர்கள் தாங்கள் கொண்டு வரும் புத்தக பையை தலையில் சுமந்தபடி வந்து செல்வார்கள்.

இதுதவிர சிறிய மழை பெய்தாலும் இந்த பாலத்தில் நடுவில் உள்ள பள்ளத்தில் அதிகஅளவில் தண்ணீர் தேங்கி சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் கூறியதாவது:- இந்த தரைப்பாலம் கடந்த 30 ஆண்டுகளாக இதே நிலையில் இருந்து வருகிறது. கடந்த 1990-ம் ஆண்டு பழையனூரில் நான் படித்தபோது இந்த தரைப்பாலத்தில் தண்ணீர் செல்லும் போது இடுப்பளவு தண்ணீரில் இறங்கி சென்றேன். அந்த நிலை தற்போதும் உள்ளது.

இந்த பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டினால் மட்டுமே இந்த பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும். அதுவரை சிறிய மழை பெய்தால் கூட இதே நிலை தான் நீடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்