செங்கல் சூளை உரிமையாளர் வெட்டிக்கொலை

ராஜபாளையம் அருகே செங்கல் சூளை உரிமையாளரை வெட்டிக்கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-05 19:41 GMT

ராஜபாளையம், 

ராஜபாளையம் அருகே செங்கல் சூளை உரிமையாளரை வெட்டிக்கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வெட்டிக்கொலை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் கிராமத்தில் யாதவர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது 63). இவருக்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்தநிலையில் ரெங்கசாமி தனக்கு சொந்தமான செங்கல் சூளையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (22) என்பவர் முன்பகை காரணமாக ரெங்கசாமியை வெட்டி படுகொலை செய்ததாக கூறப்படுகிறது.

வாலிபர் கைது

இதுகுறித்து அப்பகுதி மக்கள் சேத்தூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், துணை சூப்பிரண்டு பிரீத்தி மற்றும் சேத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் ரெங்கசாமியின் உடலை கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து கண்ணனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குடிபோதையில் கொலை செய்ததாக கூறியுள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்