நாகை, சீர்காழி கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நாகை நீலாயதாட்சியம்மன், சீர்காழி ஆஞ்சநேயர் கோவில்களுக்கு வாலிபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இதனையொட்டி மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோனையில் அது வெறும்புரளி என்பது தெரிய வந்தது.

Update: 2023-02-17 19:45 GMT

நாகை நீலாயதாட்சியம்மன், சீர்காழி ஆஞ்சநேயர் கோவில்களுக்கு வாலிபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இதனையொட்டி மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோனையில் அது வெறும்புரளி என்பது தெரிய வந்தது.

நாகை நீலாயதாட்சியம்மன் கோவில்

நாகையில் அமைந்து உள்ளது நீலாயதாட்சியம்மன் கோவில். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று தகவல் வந்தது.

இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் பிரிவினர் ஆகியோர் அடங்கிய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

தொடர்ந்து கோவிலின் நுழைவாயிலில் உள்ள அர்ச்சனை பொருட்கள் விற்கும் கடைகளில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை செய்தனர்.

1 மணி நேரம் சோதனை

தொடர்ந்து கோவிலுக்குள் சென்று கோவில் வளாகம் முழுவதிலும் வெடிகுண்டு நிபுணர்கள், மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சல்லடை போட்டு சோதனை செய்தனர். இந்த சோதனையின்போது பக்தர்கள் யாரையும் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை.

சுமார் 1 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் அங்கு வெடிகுண்டு ஏதும் இல்லை என்பதும், கோவிலில் குண்டு வைத்திருப்பதாக வந்த தகவல் வெறும் புரளி என்பதும் தெரிய வந்தது.

இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் நாகை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வீர ஆஞ்சநேயர் கோவில்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புழுகாப்பேட்டை தெருவில் வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. பழமையான இக்கோவிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று தொலைபேசி மூலம் மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து சீர்காழி போலீசார் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீரஆஞ்சநேயர் கோவிலில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தொலைபேசியில் பேசிய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதனால் சீர்காழி நகரம் முழுவதும் பரபரப்பு நிலவியது.

வாலிபர்

போலீசாரின் விசாரணையில், இரண்டு கோவில்களுக்கும் மிரட்டல் விடுத்தவர் மயிலாடுதுறை அருகே உள்ள சுந்தரப்பன்சாவடியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் வெங்கடேசன்(வயது 24) என்பதும், அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்