இந்திய ஒற்றுமை பாதயாத்திரை: ராகுல் காந்தி இன்று கூடலூருக்கு வருகை

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வருகிறார்.

Update: 2022-09-29 00:27 GMT

ஊட்டி,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை கேரளாவில் மேற்கொண்டார். நேற்று 21-வது நாளாக மலப்புரம் மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொண்டார்.

இந்த நிலையில், நிலம்பூர், வழிக்கடவு வழியாக நீலகிரி மாவட்டம் கூடலூர் ஆமைகுளத்தை இன்று (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு வந்தடைகிறார். அவருக்கு தமிழக காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையிலான கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர்.

பின்னர் பாத யாத்திரையாக கோழிப்பாலம், பள்ளிப்பாடி, நந்தட்டி, செம்பாலா, துப்புக்குட்டி பேட்டை வழியாக கூடலூர் பழைய பஸ் நிலையம் வந்தடைகிறார். அப்போது ஆதிவாசி மக்கள், படுகர், தோடர் இன மக்களை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து மெயின் ரோடு வழியாக நடந்து சென்று புதிய பஸ் நிலையம் அருகே பொதுக்கூட்ட மேடையில் மாலை 5 மணிக்கு பேசுகிறார்.

பின்னர் இரவு 7 மணிக்கு கூடலூர் தனியார் பள்ளி மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கேரவன் வேனில் தங்கி ஓய்வெடுக்கிறார். தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு புறப்பட்டு கர்நாடகா சென்றடைகிறார். ராகுல் காந்தி வருகையையொட்டி கூடலூர் நகரில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்