முத்தமிழ் கலைகளில் விருது பெற, கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் சங்கீதா தகவல்

முத்தமிழ் கலைகளில் விருது பெற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சங்கீதா கூறியுள்ளார்.

Update: 2023-06-21 00:16 GMT


முத்தமிழ் கலைகளில் விருது பெற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சங்கீதா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இயல்-இசை

தமிழ்நாட்டின் கலைப் பண்புகளை மேம்படுத்தவும், அதனை பாதுகாக்கும் நோக்கத்திலும் கலைஞர்களின் கலைத் திறனை சிறப்பிக்கும் வகையிலும் கலை பண்பாட்டுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும், கலெக்டர் தலைமையில் செயல்படும் கலை மன்றங்களின் மூலம் சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. அதில் சிறந்த கலைஞர்களை தேர்வு செய்ய மதுரை மாவட்டத்தில் எனது தலைமையில் தேர்வாளர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் இயல், இசை, நாடகம் ஆகிய கலைகளில் சிறப்பாக செயல்படும் கலைஞர்களை தேர்வு செய்து விருதுகள் வழங்க உள்ளது.

எனவே மதுரை மாவட்டத்தை சேர்ந்த பாட்டு, பரதநாட்டியம், கும்மி கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், தோல்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், நையாண்டிமேளம், கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், கணியான்கூத்து, ஓவியம், சிற்பம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், ஆழியாட்டம், கைச்சிலம்பாட்டம், சிலம்பாட்டம் (வீரக்கலை) மற்றும் வில்லிசை முதலிய செவ்வியல் கலைகள் நாட்டுப்புறக் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் கலை விருது பெற விண்ணப்பிக்கலாம்.

பொற்கிழி பட்டயம்

அதில் 18 வயதும் அதற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை இளமணி விருதும், 19 முதல் 35 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை வளர்மணி விருதும், 36 முதல் 50 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை சுடர்மணி விருதும், 51 முதல் 65 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை நன்மணி விருதும், 66 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு கலை முதுமணி விருதும் வழங்கப்பட உள்ளன. வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் 30 சிறந்த கலைஞர்களுக்கு விருது, பொற்கிழி பட்டயம் மற்றும் பொன்னாடை வழங்கப்படும்.

மதுரை மாவட்டத்தில் தேசிய விருதுகள், மாநில விருதுகள் (கலைமாமணி) மற்றும் ஏற்கனவே மாவட்டக் கலை மன்றத்தின் விருதுகளைப் பெற்ற கலைஞர்கள் இந்த விருதிற்கு விண்ணப்பம் செய்யக்கூடாது. இதற்கு முன்னர் மாவட்ட விருதுக்கு விண்ணப்பித்திருந்த கலைஞர்கள் 2022-2023 மற்றும் 2023-2024-ஆம் ஆண்டு விருது தேர்விற்கு தங்களது ஒப்புதல் வழங்கிட வேண்டும்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த கலைஞர்கள் விருதுகள் பெறுவதற்கான விண்ணப்பத்துடன் வயது சான்று, முகவரி சான்று, அடையாள அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் (3) மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்களுடன் (தொலைபேசி எண்ணுடன்) உதவி இயக்குநர், மண்டலக்கலை பண்பாட்டு மையம், பாரதி உலா முதல் தெரு, ரேஸ்கோர்ஸ் ரோடு, மதுரை -625002 என்ற முகவரிக்கு அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 0452-2566420, 9842596563 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்