84 இடங்களை கண்காணிக்க குழு நியமனம்

பேரிடர் கால முன் எச்சரிக்கையாக 84 இடங்களை கண்காணிப்பதற்கு கண்காணிப்பு குழு அமைக்கபட்டுள்ளது.

Update: 2023-10-10 18:45 GMT

ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால் வாரியம், சுகாதாரத்துறை, பள்ளி கல்வித்துறை, நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் பேரூராட்சி, ஊராட்சி உள்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முனைப்புடன் செயல்பட வேண்டும்

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

வடகிழக்கு பருவமழை, காலத்தில் ஏற்படும் புயல், வெள்ளம் போன்ற பேரிடர்களால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, துரிதமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது பல்வேறு அரசு துறைகளும் ஒருங்கிணைந்து முனைப்புடன் செயல்பட வேண்டும்.

மாவட்டத்தில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 84 பகுதிகளை, கண்காணிப்பதற்கென நியமிக்கப்பட்டுள்ள குழு அலுவலர்கள் மற்றும் வட்ட அளவிலான கண்காணிப்பு குழு அலுவலர்கள் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பேரிடர் காலங்களில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்திட, மாவட்டம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 81 நிவாரண மையங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதை உறுதிசெய்திட வேண்டும்.

மாவட்டத்தில் 2158 தன்னார்வலர்கள் முதல் நிலை மீட்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பேரிடர் காலங்களில் அரசுடன் இணைந்து மீட்பு பணியாற்றும் வகையில் 300 தன்னார்வலர்களுக்கும் ஆப்தமித்ரா பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இதுசம்பந்தமான புகார்களை 1077 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணிலும், 04575 - 246233 என்ற தொலைபேசி எண்ணிலும் தெரிவிப்பதற்கு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்