பசுமை சாம்பியன் விருதுபெற விண்ணப்பிக்கலாம்

சுற்றுச்சூழல் காலநிலைத்துறை சார்பில் வழங்கப்படும் பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்

Update: 2023-01-14 18:45 GMT


கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

100 பேருக்கு

2022-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மற்றும் வனத்துறையின் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்கள் அதாவது தனி நபர்கள் அல்லது அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது தமிழக அளவில் 100 பேருக்கு வழங்கி தலா ரூ.1 லட்சம் வீதம் பணம் முடிப்பு வழங்க உள்ளது.

சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பம், தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள் நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு காலநிலை மாற்றத்துக்குட்படுதல், தணிப்பு நடவடிக்கை காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி கட்டுப்பாடு நடவடிக்கை, சுற்றுச்சுழல் மறு சீரமைப்பு, பாதுகாப்பு, கடலோர பாதுகாப்பு மேலாண்மை போன்றவற்றில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.

விண்ணப்ப படிவம்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 3 தனி நபர்கள் அல்லது நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும்.

இதற்கான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய www.tnpcp.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட 2 விண்ணப்பங்கள் மற்றும் பதிவேற்றம் செய்யப்பட்ட குறுந்தகடு ஆகியவை உள்ளடக்கிய உறையின் மேல் பசுமைச்சாம்பியன் விருது என குறிப்பிட்டு வருகிற ஏப்ரல் 15-ந் தேதிக்குள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும். மேலும் இதுபற்றிய கூடுதல் தகவல் தேவைப்படுவோர் விழுப்புரம் மாவட்டசுற்றுச்சூழல் பொறியாளரை அணுகலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்