'அ.தி.மு.க. பொதுச்செயலாளர்' என குறிப்பிட்டு சட்ட ஆணையம் கடிதம் - எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அங்கீகாரம்

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு சட்ட ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

Update: 2022-12-28 21:48 GMT

நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையிலான 'ஒரே நாடு ஒரே தேர்தலை' செயல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இது தொடர்பாக ஆய்வு செய்யுமாறு தேசிய சட்ட ஆணையத்தை, மத்திய சட்ட அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

இந்த விவகாரத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர்களிடம் கருத்து கேட்டு, அவர்களது நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் முக்கிய சட்ட திருத்தத்தை சட்ட ஆணையம் கொண்டு வர உள்ளது.

நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது பொதுமக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும்தான் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே சட்ட ஆணையம் பொதுமக்களிடமும், அரசியல் கட்சிகளிடமும்தான் இதுதொடர்பான கருத்துகளை கோர விரும்புகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க.வின் கருத்துகளை கேட்கும் வகையில் சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. சட்ட ஆணையத்தின் தலைவரும், நீதிபதியுமான ரிது ராஜ் அவஸ்தி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டு கருத்து கேட்கும் பொது நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், 'நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது, அரசியல் அமைப்பின் ஜனநாயக அடிப்படை கட்டமைப்பையோ அல்லது நாட்டின் கூட்டாட்சி அரசியலையோ எந்த வகையிலும் கெடுக்குமா?

நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஏதேனும் ஆலோசனைகள், பரிந்துரைகள் மற்றும் அந்த வரைவு அறிக்கை அரசியல் அமைப்பு திட்டங்களை மீறுவதாக உள்ளதா? ஆம் என்றால், எந்த அளவுக்கு? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் இடம் பெற்றுள்ளன.

இதுதொடர்பான கருத்துகளை ஜனவரி 16-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் முறையில் 30 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் காரணமாக முன்னாள் முதல்-அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனி அணியாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள். இரு தரப்பினரும் தாங்கள்தான் உண்மையான அ.தி. மு.க. என்று கூறி வருகின்றனர். அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். இதுதொடர்பான வழக்கும் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த சூழ்நிலையில், சட்ட ஆணையம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருப்பதன் மூலம், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அங்கீகாரம் வழங்கி இருப்பதாக அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்