நடிகர் விஜய் பேசியதில் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை - திருமாவளவன்

தவெக தலைவர் விஜய் மாணவர்களிடம் நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என கூறியதில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை. என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-30 10:10 GMT

மதுரை,  

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது: "கள்ளச்சாராய, நச்சுச்சாராய சாவு இந்தியா முழுமையும் உள்ளது. இதற்கு தீர்வு பூரண மது விலக்கு. டாஸ்மாக் கடையில் விற்கும் மதுவாலும் பாதிப்பு உள்ளது. ஆகவே தேசிய அளவில் மது விலக்கு கொள்கை அமல்படுத்த வேண்டும். மெத்தனால் மாபியா கும்பலை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். தமிழக அரசு முதலில் படிபடியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணத்தை நேரில் சென்று பார்த்த போது அங்குள்ள மக்கள் கூறியது டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தான். கள் விற்பனை, டாஸ்மாக் மது உட்பட எந்த வகை மதுவும் வேண்டாம். முதல்வர் ஸ்டாலின் டாஸ்மாக் கடைகளை மூடினால் மக்களிடம் ஆட்சிக்கு நல்ல பெயர் கிடைக்கும். பூரண மது விலக்கை ஆதரித்து விசிக சார்பில் பெரியார் பிறந்த நாள் அன்று மிகப் பெரிய மகளிர் மாநாடு நடை பெற உள்ளது.

மதுவிலக்கு சட்ட மசோதா நல்லது தான், ஆனால் பூரண மது விலக்கு என்பதே தீர்வு. நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவரின் உரை உண்மைக்கு மாறான உரை. அவர்கள் பெரும்பான்மை பெற்றதாக கூறுவது தவறு. கடந்த தேர்தலில் பெற்ற இடங்களை விட 63 இடங்கள் குறைவாக தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றுள்ளது. தவெக தலைவர் விஜய் மாணவர்களிடம் நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என கூறியதில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை. மாணவர்கள் நல்ல தலைவர்களாக உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் கூறியதாகவே நான் கருதுகிறேன் " என்று அவர் கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்