உணவு தயாரிப்பு தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை மானியம் பெறலாம்

உணவு தயாரிப்பு தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை மானியம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-15 19:47 GMT

பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் (பி.எம்.எப்.எம்.ஈ.) திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்துதல் வகைபாட்டின் கீழ் அடங்கும் பழச்சாறு, பழக்கூழ் தயாரித்தல், காய்கறிகள், பழங்கள், மீன் மற்றும் இறால் கொண்டு செய்யப்படும் ஊறுகாய், வற்றல் தயாரித்தல், அரிசி ஆலை, உலர் மாவு மற்றும் இட்லி தோசைக்கான ஈர மாவு தயாரித்தல் போன்ற தொழில்களை புதிதாக தொடங்க ஆர்வமுள்ளோர், ஏற்கனவே உணவுப்பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் குறு நிறுவனங்கள், சுய உதவி குழுவினர், உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர், உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் ஆகியோர் மானியத்துடன் கூடிய கடனுதவி பெறலாம்.

ரூ.1 கோடி வரையிலான திட்டத்தொகை கொண்ட உணவுபதப்படுத்தும் தொழில் திட்டங்கள் இத்திட்டத்தின் கீழ் உதவி பெறத்தகுதி பெற்றவை. திட்ட தொகையில் 10 சதவீதம் முதலீட்டாளர் தம் பங்காக செலுத்த வேண்டும். 90 சதவீத வங்கிகளால் பிணையமில்லா கடனாக வழங்கப்படும். அரசு மானியம் 35 சதவீதம், அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும். சுய உதவிக்குழுவினர் உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.40 ஆயிரம் வீதம் தொடக்க நிலை மூலதனமாக வழங்கப்படும். மேலும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற pmfme.mofpi.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், பெரம்பலூர்என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 89255 33976, 89255 33978 என்ற தொலைபேசி எண்கள் வழியாகவோ தொடர்புகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்