குழவி கல்லை தலையில் போட்டு மாணவன் படுகொலை

பண்ருட்டி அருகே மதுகுடித்ததை தட்டிக்கேட்டதால் குழவி கல்லை தலையில் போட்டு பள்ளி மாணவனை கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-19 18:53 GMT

புதுப்பேட்டை, 

பண்ருட்டி அருகே உள்ள அங்குசெட்டிப்பாளையம் இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் முருகன் (வயது 38). இவருடைய மனைவி சுமதி (32). இந்த தம்பதிக்கு லதா (11), நந்தினி (7) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். அர்ஜூனன் (14) என்ற மகனும் இருந்தான்.

இதில் அர்ஜூனன், அங்குசெட்டிப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். முருகன் சிறுவத்தூரில் உள்ள ஒரு செங்கல் சூளையில் குடும்பத்தினருடன் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார். முருகன் அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

படுகொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மீண்டும் முருகன் மதுகுடித்துவிட்டு வந்து சுமதியிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதைபார்த்து கோபமடைந்த அர்ஜூனன், தனது தந்தையிடம் ஏன் இப்படி மதுகுடித்துவிட்டு வந்து அம்மாவிடம் தகராறு செய்து வருகிறீர்கள் என கூறி தட்டிக்கேட்டுள்ளான். இதையடுத்து முருகன் அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் அர்ஜூனன் வீட்டில் படுத்து தூங்கினான்.

நள்ளிரவு 1 மணி அளவில் மீண்டும் மதுகுடித்துவிட்டு முருகன் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து, அவரை தாக்க முயன்றுள்ளார். அவரிடம் இருந்து சுமதி தப்பி ஓடிவிட்டார். மதுபோதையில் ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த முருகன் தனது மகன் என்றும் பாராமல் அங்கு தூங்கிக்கொண்டிருந்த அர்ஜூனனின் தலையில் குழவி கல்லை தூக்கிப் போட்டார். இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அர்ஜூனன் பரிதாபமாக இறந்தான்.

தந்தை கைது

இது குறித்த தகவலின் பேரில் புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அர்ஜூனன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். மதுபோதையில் பெற்ற மகன் மீது குழவி கல்லை தூக்கிப்போட்டு தந்தையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்