காதல் கணவர் வீட்டு முன்பு பெண் தர்ணா

காதல் கணவர் வீட்டு முன்பு பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-07 19:11 GMT

குடும்ப தகராறு

அறந்தாங்கியை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும், 20 வயதுடைய ஆணுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மணமேல்குடியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பெற்றோருக்கு பயந்து இருவரும் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபம் அடைந்த 20 வயது வாலிபர் தனது மனைவியை அங்கேயே விட்டுவிட்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் கோத்தகிரியில் தனியாக இருந்த பெண் தனது தாய்-தந்தையை சந்தித்தார். ஆனால் அவர்கள் வீட்டுக்குள் அவரை அனுமதிக்கவில்லை.

விஷம் குடித்தார்

காதல் கணவர் கைவிட்ட நிலையில் பிறந்த வீட்டிலும் அடைக்கலம் கிடைக்காத சூழ்நிலையில் மீண்டும் வேறு வழியின்றி கணவர் வீட்டுக்கு சென்று விடலாம் என்று கருதி அங்கு சென்றார். ஆனால் அங்கு அவரது மாமனார், மாமியார் மற்றும் அவரது கணவர் ஆகியோர் அவரை அங்கிருந்து துரத்தியுள்ளனர். இதனால் செய்வதறியாமல் திகைத்து அறந்தாங்கி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மனவேதனையுடன் இறந்து விடலாம் என்று எண்ணி விஷம் அருந்தினார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

தர்ணா

இந்தநிலையில் தனது கணவர் வீட்டின் முன்பு அந்த பெண் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீசார் அந்த பெண்ணுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவரை அங்குள்ள காப்பகத்தில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்