வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி திருட்டு

கீரமங்கலத்தில் வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-10-10 19:00 GMT

5 பவுன் சங்கிலி திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் மேற்கு திருவள்ளுவர் மன்றம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் மனைவி சரண்யா (வயது 33). நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் சரண்யா கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு அருகில் இருந்த செல்போன் மற்றும் கை பையையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர்.

பின்னர் வராண்டாவில் தூங்கிய சரண்யாவின் மாமியார் மலர்கிளியின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை அறுக்க முயன்றனர். அப்போது அவர் கண்விழித்து சத்தம் போட்டதால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று வெளியில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி சென்றுவிட்டனர்.

வலைவீச்சு

சத்தம் கேட்டு வீட்டில் தூங்கியவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை விரட்டிச் சென்றும் மர்மநபர்களை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் சரண்யா புகார் கொடுத்தார். இதையடுத்து கீரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட சிறப்பு தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி மற்றும் கைப்பை, செல்போனை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்