செல்லப்பிராணி நாயை 'நாய்' என அழைத்ததால் ஆத்திரம்; விவசாயி அடித்துக்கொலை - திண்டுக்கல்லில் பயங்கரம்

திண்டுக்கல்லில் செல்லப்பிராணி நாயை 'நாய்' என அழைத்ததால் விவசாயி அடித்துக்கொல்லப்பட்டார்.

Update: 2023-01-23 10:28 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பை சேர்ந்த 65 வயது விவசாயி ராயப்பன். இவரது அண்டை வீட்டை சேர்ந்த வின்சென்ட் மற்றும் டேனியல் தங்கள் வீட்டில் செல்லப்பிராணி நாய் வளர்த்து வருகின்றனர்.

வின்சென்ட், டேனியலின் செல்லப்பிராணி நாய் கிராமத்தில் உள்ள தெருவில் நடந்து செல்பவர்களை விரட்டி சென்று குரைத்து, சிலரை கடிக்கவும் முயன்றுள்ளது. ராயப்பனும், வின்சென்ட், டேனியலும் உறவினர்கள் ஆவார். நாய் குரைப்பது தொடர்பாக ராயப்பன் அவ்வப்போது வின்சென்ட், டேனியலிடம் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை நாய் தொடர்ந்து குரைப்பதாகவும், அந்த 'மிருகத்தை' கயிற்றில் கட்டிப்போடும்படியும் ராயப்பன் கூறியுள்ளார். நாயின் பெயரை கூறி அழைக்காமல் நாய் என்று எப்படி அழைக்கலாம் என்று ஆத்திரமடைந்த நாயின் உரிமையாளர்கள் வின்செட், டேனியல் இருவரும் இணைந்து ராயப்பனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ராயப்பனை வின்செட், டேனியல் கடுமையாக தாக்கினர். இதில் நிலைகுலைந்த ராயப்பன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமத்தினர். ராயப்பனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ராயப்பனை தாக்கி கொலைசெய்துவிட்டு தலைமறைவாக உள்ள வின்சென்ட், டேனியல் அவரது தாயார் நிர்மலா பாத்திமா ராணி ஆகிய 3 பேரையும் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த சூழ்நிலையில் தலைமறைவாக இருந்த நிர்மலா பாத்திமா ராணி, டேனியல், வின்சென்ட் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்