3 போலீசார் மீதான வழக்கு மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றம்

3 போலீசார் மீதான வழக்கு மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றம்

Update: 2023-03-01 18:45 GMT

மதுரையை சேர்ந்தவர் ராமானுஜன் மகன் வெங்கடேசன் (வயது26). திருட்டு வழக்கு தொடர்பாக கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி பரமக்குடி எமனேஸ்வரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட இவர் போலீசார் தாக்கியதில் இறந்ததாக புகார் கூறப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி (65) உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில் ஓய்வு பெற்ற முனியசாமியை முதுகுளத்தூர் அருகே உள்ள ஏனாதி பகுதியில் வைத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போலீசார் கைது செய்தனர். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி உடல்நிலை பாதிக்கப்பட்டு மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் இறந்துபோனார். இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் நயினார்கோவில் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் பரமக்குடி ஞானசேகரன், முதுகுளத்தூர் போலீஸ் தனிப்பிரிவு காவலர் மஞ்சூர் கிருஷ்ணவேல் மற்றும் சாயல்குடி போலீஸ் தனிப்பிரிவு காவலர் ஆப்பநாடு கோதண்டராமன் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் ரகசிய வாக்குமூலம் பெற்று ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண்.2 கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கைதி மரணம் தொடர்பான வழக்கு நீதித்துறை நடுவர் கோர்ட்டில் இருந்து மாவட்ட முதன்மை கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இதன்படி நேற்று இந்த வழக்கு விசாரணை மாவட்ட நீதிபதி முன்னிலையில் வந்த நிலையில் வழக்கினை வரும் 13-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்