இலங்கை சிறையிலிருந்து 23 தமிழக மீனவர்கள் விடுதலை - விமான நிலையத்தில் வரவேற்பு

இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 23 தமிழக மீனவர்களை சென்னை விமான நிலையத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.

Update: 2022-07-22 07:11 GMT

ஆலந்தூர்,

தமிழ்நாட்டை சோ்ந்த மயிலாடுதுறை, நாகப்பட்டினம், மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 3-ம் தேதி அதிகாலையில், கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினா், தமிழக மீனவர்களையும், அவர்களுடைய படகுகளையும் சுற்றி வளைத்து கைது செய்தனா்.

இதை அடுத்து மீனவர்களின் குடும்பத்தினர் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து தமிழக அரசு மீனவர்களை விடுவிக்க முயற்சிகள் எடுத்தது.

அதன் பிறகு கடந்த 8-ம் தேதி இலங்கை நீதிமன்றம் மீனவா்களை விடுவித்தது. இந்நிலையில் இன்று அதிகாலை, இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து சென்னைக்கு வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 23 மீனவர்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சென்னை விமான நிலையத்தில் இவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். அதோடு அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான வாகன வசதிகளும், தமிழக அரசு மீன்வளத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்