பிரதமரின் திட்டங்களை மறைக்கவே பல்வேறு போராட்டங்கள் தமிழிசை சவுந்தரராஜன்

பிரதமர் மோடியின் திட்டங்களை மறைக்கவே தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களை முன் எடுத்து செல்கின்றனர் என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #TamilisaiSoundarajan

Update: 2018-04-20 20:07 GMT
பூந்தமல்லி

மத்திய அரசின் சார்பில் உஜ்வலா தின விழா நேற்று நடைபெற்றது. இதன் மூலம் எஸ்.சி., எஸ்.டி., மலைவாழ் மக்களுக்கு ‘டெபாசிட்’ தொகை இல்லாமல் இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கப்படுகிறது.

சென்னை போரூரை அடுத்த முகலிவாக்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு 200 பேருக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பை வழங்கினார்.

பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் நேர்மையான அரசியல் நடத்தப்பட வேண்டும் என்பது எனது கருத்து. எங்களது கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் தவறான கருத்துகளை பதிவிட்டால், பத்திரிகை சகோதரர்களை தவறாக சித்தரித்தால் அது தவறு என்று கூறி அதனை நீக்க சொல்லி வருகிறோம்.

அதனை நீக்கிய பிறகும் பா.ஜனதா என்றால் அப்படித்தான் என்று குற்றம் சாட்டுவது சரி அல்ல. யாரையும் சிறுமைபடுத்தும் நோக்கமும், கொள்கையும் பா.ஜனதாவுக்கு கிடையாது. தவறு எங்கு இருந்தாலும் அது திருத்தப்பட வேண்டும்.

குறைவான மாணவர்கள் உள்ள அரசு பள்ளிகள் மூடப்படும் என்ற செய்தி கவலையை தருகிறது. அரசு பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது எனது கருத்து.

எல்.இ.டி மின் விளக்குகள் மூலம் சென்னை மாநகராட்சிக்கு ரூ.18 கோடி மின்சார கட்டணம் சேமிப்பு ஆகிறது என்று செய்தி வந்துள்ளது. இது பிரதமர் கொண்டு வந்த திட்டம் மூலம்தான் கிடைத்துள்ளது.

பிரதமர் மோடி கொண்டு வரும் திட்டங்கள் மக்களுக்கு பயன்தர ஆரம்பித்துள்ளது. இதனை எல்லாம் மறைக்கவும், மறக்கவும் வேண்டும் என்றே பல போராட்டங்களை தமிழகத்தில் முன் எடுத்து செல்கின்றனர். ஆனால் அது எடுபடாமல் போய் விடும். சட்ட ரீதியாக நமக்கு காவிரி நீர் கிடைக்கப்போகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்