சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கரூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
சிறுமிகள் பலாத்காரம்
கரூர் ரெங்கநாதன்பேட்டையை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 42). இவர் கடந்த 2020-ம் ஆண்டு வாங்கல் பகுதியை சேர்ந்த 6 மற்றும் 4 வயது சிறுமிகளை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்த புகாரின்பேரில், கரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, சீனிவாசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
20 ஆண்டுகள் சிறை
இதையடுத்து வழக்கு விசாரணை முழுமையாக முடிவடைந்தது. இதையடுத்து இந்த வழக்கிற்கான தீர்ப்பை மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமாபானு நேற்று வழங்கினார். இதில் குற்றம் சாட்டப்பட்ட சீனிவாசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இதனால் நீதிமன்ற வளாகம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.