துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கம் பறிமுதல் - 3 பேர் கைது

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கம், மிண்ணு பொருட்கள், குங்குமப்பூவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-07-16 15:43 GMT

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது துபாயில் இருந்து வந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த பொன்னுசாமி (வயது 32) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். பின்னர் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். இவரிடம் இருந்து ரூ.55 லட்சத்தி 38 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 250 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

மேலும் துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சென்னை மணாலியை சேர்ந்த தமீம் அப்துல் ரகுமான்(39), திருச்சியை சேர்ந்த முகமது ஹபிபுல்லா(30) ஆகியோர் வந்தனர். இவர்களது உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ரூ. 18 லட்சத்தி 97 ஆயிரம் மதிப்புள்ள மிண்ணு பொருட்கள், குங்குமப்பூ, வெளிநாட்டு சிகரெட்டுகள் ஆகியவற்றை கைப்பற்றினார்கள்.

மேலும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்த போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். 2 பேரிடம் இருந்து ரூ. 62 லட்சத்தி 81 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 425 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். 3 பேரிடம் இருந்து ரூ. 1 கோடியே 37 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 675 கிராம் தங்கம், மிண்ணு பொருட்கள், குங்குமப்பூ, வெளிநாட்டு சிக்ரெட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து 3 பேரை கைது செய்த அதிகாரிகள் தங்க கடத்தல் பிண்ணனியில் உள்ளவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்