ஓடும் பஸ்சில் பெண் என்ஜினீயரிடம் 17 பவுன் நகை அபேஸ்

Update: 2023-03-01 19:30 GMT

சூரமங்கலம்:-

சேலத்தில் ஓடும் பஸ்சில் பெண் என்ஜினீயரிடம் 17 பவுன் நகை அபேஸ் செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்ஜினீயர்

சேலம் மாமாங்கம் எம்.ஜி.ஆர். நகர் முதல் தெருவை சேர்ந்த சரண் மனைவி பிரீத்தி (வயது 28). என்ஜினீயரான இவர் பெங்களூருவில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ஊருக்கு வந்துள்ள பிரீத்தி நேற்று கருப்பூர் சுங்கச்சாவடி அருகே உள்ள ஒரு கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டார்.

பின்னர் வீட்டுக்கு செல்வதற்காக பிரீத்தி, கருப்பூர் சுங்கச்சாவடியில் இருந்து டவுன் பஸ்சில் ஏறி அமர்ந்தார். அப்போது பஸ்சில் குழந்தையுடன் நின்று கொண்டிருந்த 2 பெண்கள் அவரை இடித்து கொண்டே இருந்தனர். இதனால் அவர்களிடம் ஏன்? இப்படி இடித்து கொண்டிருக்கிறீர்கள் எனவும், காலியாக உள்ள இருக்கையில் சென்று அமருமாறு கூறினார்.

17 பவுன் நகை அபேஸ்

இதையடுத்து பிரீத்தி மாமாங்கத்தில் இறங்கி தனது வீட்டுக்கு சென்றார். தான் வைத்திருந்த கை பையை திறந்து பார்த்த போது அதில் இருந்த 17 பவுன் நகையை காணவில்லை. மேலும் பையில் இருந்த நகையை தன்னை இடித்துக் கொண்டிருந்த பெண்கள்தான் அபேஸ் செய்திருக்கலாம் என்று கருதினார்.

இந்த திருட்டு தொடர்பாக சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் பிரீத்தி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரிடம் ஓடும் பஸ்சில் நகையை துணிகரமாக திருடி சென்ற பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்