கஞ்சா கடத்திய 3 பேருக்கு தலா 12 ஆண்டு சிறை- மதுரை கோர்ட்டு தீர்ப்பு

கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-09-26 00:31 GMT


கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு உத்தரவிட்டது.

சோதனை

கடந்த 2020-ம் ஆண்டில் தேனி பகுதியில் கஞ்சா கடத்துவதாக தேனி மாவட்ட போதைப்பொருள் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை செய்தனர். அப்போது பெரியகுளத்தில் இருந்து தேனி செல்லும் சாலையில் அனஞ்சி விலக்கு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் நின்று இருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

12 ஆண்டு சிறை

அவரிடம் 24 கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், அவரை கைது செய்து விசாரித்தனர். இதில் அவர் கம்பத்தை சேர்ந்த ராஜசேகர் (வயது 33) என்று தெரிய வந்தது. இந்த வழக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு வழக்குகளுக்கான முதலாவது சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் விஜயபாண்டியன் ஆஜரானார். முடிவில், ராஜசேகர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஹரிஹர குமார் நேற்று தீர்ப்பளித்தார்.

22 கிலோ கஞ்சா

இதே போல கடந்த 2015-ம் ஆண்டில் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் 22 கிலோ கஞ்சாவுடன் அதே பகுதியைச் சேர்ந்த மனோகரன் (45), தெய்வம் (63) ஆகிய இருவரையும் கம்பம் வடக்கு போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு மதுரை 2-வது போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் சுரேந்திரன் ஆஜரானார். முடிவில் இருவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஹரிஹரகுமார் நேற்று தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்