அரசு கண்டக்டர் வீட்டில் 11 பவுன் நகைகள் கொள்ளை
பொள்ளாச்சியில் அரசு கண்டக்டர் வீட்டில் 11 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் அரசு கண்டக்டர் வீட்டில் 11 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஓய்வு பெற்ற கண்டக்டர்
பொள்ளாச்சி சேரன் நகரை சேர்ந்தவர் குழந்தைவேல்(வயது 68). ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி கலைச்செல்வி(61).
இந்த நிலையில் கணவன்-மனைவி 2 பேரும், கடந்த 17-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு கோவை தண்ணீர் பந்தல் பகுதியில் தனது மூத்த மகள் வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு சென்றனர்.
இதையடுத்து அவர்கள் நேற்று முன்தினம் இரவில் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
11 பவுன் நகைகள் கொள்ளை
உடனே வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த வளையல், மோதிரம் என சுமார் 11 பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது. மேலும் வெள்ளி பொருட்களும், ரூ.15 ஆயிரமும் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிந்திருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இது தவிர அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்பேரில் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.