மின்சாரக் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.8 வசூல்; ஆடிப்போன அடுக்குமாடி வாசிகள்

அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிநீர் மோட்டார்கள், கார் நிறுத்தம், படிக்கட்டுகள் மற்றும் பொது இடங்களில் எரியும் மின்விளக்குகள், எந்திர 'லிப்ட்'கள் போன்றவைகளுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வீடுகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தைக் காட்டிலும் இது கடுமையாக இருப்பதால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்கள்.

Update: 2022-12-08 18:37 GMT

மின்சாரக்கட்டண உயர்வு

புதிய மின்சாரக் கட்டண உயர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைமுறைக்கு வந்தது. நாம் கட்டுகிற மின்சாரக் கட்டணம், நமக்கு அரசு தருகிற மானியம் ஆகியவை மூலமாக தமிழ்நாடு மின்வாரியத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.65 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது.

மின்சாரம் கொள்முதல் செய்வது, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது, வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவது போன்ற செலவினங்களுக்காக மின்வாரியத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.77 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது.

இவ்வாறு வரவுக்கு மீறி செலவாகி வருவதால் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வரும் மின்வாரியம், சற்று அதில் இருந்து மீளுவதற்காக மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு மின்சார ஒழுங்கு முறை ஆணையமே முன்வந்து, 15 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தி இருந்தது. அதன்பின்னர், எந்தவித கட்டண உயர்வும் செய்யப்படவில்லை.

தற்போது தமிழகத்தில் புதிய மின் கட்டணத்தை 34 சதவீதம் உயர்த்தி மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது. இந்த புதிய மின்கட்டண உயர்வால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள முதல் 100 யூனிட்டுகளுக்கு கட்டணம் கிடையாது. அதற்கு மேல் பதிவாகும் யூனிட்டுகளுக்கு உயர்த்தப்பட்ட இந்த புதிய மின் கட்டணம் பொருந்தும்.

இதனால் முன்பு இருந்த கட்டணத்தைவிட, குறைந்தது ரூ.100 முதல் ரூ.1,000-க்கு மேல் ஒவ்வொருவரும் அதிகமாகச் செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது.

அடுக்குமாடி வாசிகள் ஆதங்கம்

இதில் இன்னும் ஒருபடி மேலாக, பொதுப் பயன்பாட்டிற்கு மின் இணைப்பைக் கொண்டிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு மேலும் அதிர்ச்சிதரும் வகையில் கட்டண உயர்வு அமைந்து இருக்கிறது. இதனால் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் கடும் ஆதங்கத்தில் உள்ளனர்.

அரியலூர், பெரம்பலூர் உள்பட மாநிலம் முழுவதும், பல வீடுகளை உள்ளடக்கிய அடுக்குமாடி குடியிருப்புகளில் கூட்ட அறை, வாகன நிறுத்தங்கள், 'லிப்ட்', குடிநீர் மோட்டார் பம்ப், 'ஜிம்' போன்ற பொதுப் பயன்பாட்டுக்காக, தனி மின் இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய மின் கட்டண உயர்வு வரும் வரை, இதுபோன்ற பொதுப் பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கு, வீடுகள் போன்றே ஒரே சீரான மின்கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதன்படி, முதல் 100 யூனிட் இலவசம். 500 யூனிட் வரை மானியக் கட்டணம் என்ற சலுகைகள் கிடைத்தன.

தற்போது இந்த பொதுப் பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கு கட்டணச் சலுகை நிறுத்தப்பட்டு, வணிக ரீதியிலான கட்டணத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் நிர்ணயித்து இருக்கிறது. அதன்படி, அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுப் பயன்பாட்டிற்கான மின் இணைப்புக் கட்டணமாக ஒரு யூனிட்டுக்கு ரூ.8-ம், நிரந்தர கட்டணமாக ஒரு கிலோ வாட்டுக்கு மாதம் ரூ.100-ம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

இதுவரைப் பொதுப்பயன்பாட்டிற்கு மின் இணைப்பில் எந்தவிதக் கட்டணமும் செலுத்தாமல் இருந்து வந்த நிலை மாறி, தற்போது வீடுகளுக்கான கட்டணத்துடன் கூடுதலாக இதையும் சேர்த்துச் செலுத்த வேண்டிய நிலைக்கு அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் வந்து இருக்கிறார்கள்.

இதில் சில அடுக்குமாடி குடியிருப்புகளில் சாதாரண மின் இணைப்புகளைக் கூட பொதுப் பயன்பாட்டிற்கான மின் இணைப்புகளாகக் கருதி, ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாயாகக் கணக்கிட்டு பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடும் எதிர்ப்பு

இதற்கு அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதோடு, இதற்கு மாற்று ஏற்பாட்டை அரசு செய்து தரவேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளனர். பெரும்பாலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் வசதி படைத்தவர்கள் என்ற மாயை இருக்கிறது. அவர்களுக்கு இந்தக் கட்டண உயர்வு பாதிப்பை ஏற்படுத்தாது என்று நினைப்பது தவறு. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதும், வங்கிக் கடன் பெற்று அதை ஒவ்வொரு மாதமும் கஷ்டப்பட்டு செலுத்திவருபவர்கள் என்பதையும் யாரும் மறந்துவிடக்கூடாது.

இந்த கட்டண உயர்வால் அவர்கள் மாதம் மாதம் செலுத்தும் பராமரிப்பு செலவு கடுமையாக அதிகரித்து அவர்களை அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது. இதுபற்றி அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அவர்கள் கூறியதாவது:-

பராமரிப்பு கட்டணம் கூடுதலாக வசூல்

பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு ஸ்ரீகர்ணம் சுப்ரமணியம் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் கார்த்திகேயன்:- 16 வீடுகள் கொண்ட எங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் பொது பயன்பாட்டுக்கான மின்சார கட்டணம் கடந்த முறை ரூ.3 ஆயிரத்து 820 செலுத்தப்பட்டது. தற்போது பொது பயன்பாட்டுக்கான மின்சார கட்டணம் புதிய கட்டண விகிதத்தால் இந்த முறை ரூ.7 ஆயிரத்து 80 செலுத்தப்பட்டுள்ளது. இதனால் குடியிருப்பில் வசிப்பவர்களிடம் பராமரிப்பு கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இது அடுக்குமாடி குடியிருப்பில் கூடியிருக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது. இதனை தமிழக அரசு பரிசீலனை செய்து பொது பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை ஏற்கனவே இருந்தது போல் வீட்டு பிரிவுக்கான கட்டணம் போல் வசூலிக்க உத்தரவிட வேண்டும்.

கூடுதல் சுமை

பெரம்பலூர் கிரசண்ட் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த குணசேகரன்:- 14 வீடுகள் கொண்டுள்ள எங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் பொது பயன்பாட்டுக்கான மின் கட்டணம் கடந்த முறை ரூ.978 செலுத்தினோம். ஆனால் இந்த முறை அதற்கான மின் கட்டண உயர்வால் ரூ.4 ஆயிரத்து 28 செலுத்தியுள்ளோம். இதனால் அடுக்குமாடி குடியிருப்பவர்களிடம் பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படாத உரிமையாளருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே பொதுப் பயன்பாட்டுக்கான மின்சார கட்டணத்தை ஏற்கனவே இருந்தது போல் வீட்டு பிரிவுக்கான கட்டணமாக வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் கதிரவன்:- அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் லிப்ட், நீர் மோட்டார், மின் விளக்குகள் ஆகியவற்றுக்கான மின் கட்டணத்தை உயர்த்தி இருப்பது, குடியிருப்போருக்கு இரட்டை சுமையை ஏற்படுத்தியுள்ளது. பொது பயன்பாட்டுக்கான மின்சாரத்தையும், வர்த்தக பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை நிர்ணயித்திருப்பது ஏற்புடையதல்ல. இதனால், அடுக்குமாடி குடியிருப்பில் இரவு நேரங்களில் பொது பயன்பாட்டுக்கான மின் விளக்குகள் அணைக்கப்படும். இது திருட்டு சம்பவங்கள் நடைபெற வழிவகுக்கும். மேலும், பராமரிப்பு கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும். எனவே, பொதுப்பயன்பாடுக்கான மின் கட்டண உயர்வை தமிழ்நாடு மின்வாரியம் திரும்ப பெற வேண்டும்.

இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாக சொல்வது தவறு. மின்வாரியத்தின் வருவாய் சரியாக அரசிடம் வந்து சேர்ந்தால், நஷ்டம் என்ற வார்த்தைக்கே இடம் இருக்காது. தற்போது பொதுப் பயன்பாட்டு மின் கட்டணம் நடைமுறைக்கு வந்திருப்பதால், மின்வாரியத்துக்கு 2 மாதத்துக்கு ஒரு முறை குறைந்தபட்சம் ரூ.15 கோடியும், அதிகபட்சம் ரூ.50 முதல் ரூ.54 கோடியும் வருவாய் கிடைக்கும். இதுதவிர, நிரந்தர கட்டணமாக ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.100 என்ற வீதத்தில் வரும் வருவாயும் தனியாக வரும். இது அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு தங்கியிருக்கும் நடுத்தர வர்க்க மக்களை பெரிதும் பாதிக்கும். ஏராளமான வீடுகள் கொண்ட சில அடுக்குமாடி குடியிருப்புகளில் இந்தக் கட்டண உயர்வால், பராமரிப்பு செலவை ஒரு சதுர அடிக்கு ஒரு ரூபாய் அதிகரித்துவிட்டனர்' என்று தெரிவித்தனர்.

சென்னை, திருச்சி போன்ற பெருநகரங்களில் மட்டும் அல்ல சிறு நகரங்களில்கூட அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகி வருகின்றன. குழுக்களாக வீடுகள் கட்டி வாடகைக்கும் விடுகிறார்கள். இந்த புதிய மின்கட்டண முறையால் அங்கு குடியிருக்கும் வாடகைதாரர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்