கடைமுக தீர்த்த வாரி: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

கடைமுக தீர்த்த வாரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-15 16:58 GMT

மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ் பெற்றதாகும். பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக கருமை நிறம் அடைந்த கங்கை நதி உள்ளிட்ட ஜீவநதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்கள் பாவங்களை போக்கிகொண்டதாக புராண வரலாறு கூறுகிறது.

அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் துலா உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது சிவாலயங்களில் இருந்து சாமி புறப்பாடாகி, துலா கட்டத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். வழக்கம்போல் இந்த ஆண்டு ஐப்பசி மாதம் 1-ந் தேதி துலா உற்சவம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து 10 நாள் நடைபெறும் ஐப்பசி கடைமுக தீர்த்தவாரி உற்சவம் மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவிலில் கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முக்கிய விழாவான திருக்கல்யாணம் தேரோட்டம் இன்று (15-ந் தேதி) நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கடைமுக தீர்த்தவாரி 16-ம் தேதி நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது.

பல்வேறு சிவாலயங்களிலும் இதுபோல் உற்சவங்கள் தொடங்கியுள்ள நிலையில் 16-ந் தேதி (நாளை) கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவிட்டுள்ளளார். விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 19ம் தேதி பணிநாளாக செயல்படு என்றும் கலெக்டர் லலிதா அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்