வீடு புகுந்து ரூ.1 கோடி கொள்ளையடித்த கும்பலுக்கு 'நல்ல நேரம்' குறித்து கொடுத்த ஜோதிடர் கைது; சிறையில் 'கம்பி' எண்ணுகிறார்

வீடு புகுந்து ரூ.1 கோடியே 6 லட்சம் நகை, பணம் கொள்ளை அடித்த கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு நல்ல நேரம் குறித்து கொடுத்த ஜோதிடரும் சிக்கினார்.

Update: 2023-08-22 19:15 GMT

புனே, 

வீடு புகுந்து ரூ.1 கோடியே 6 லட்சம் நகை, பணம் கொள்ளை அடித்த கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு நல்ல நேரம் குறித்து கொடுத்த ஜோதிடரும் சிக்கினார்.

நகை, பணம் கொள்ளை

புனே மாவட்டம் பராமதியை சேர்ந்தவர் சாகர் கோப்னே. இவர் சம்பவத்தன்று வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தார். வீட்டில் அவரது மனைவி தனியாக இருந்தார். அப்போது திடீரென வீட்டில் புகுந்த 5 பேர் கும்பல் மனைவியை கயிற்றால் கட்டி போட்டனர். சத்தம் போடாமல் இருக்க வாயை துணியால் கட்டினர். பின்னர் வீட்டில் இருந்த ரூ.95 லட்சம் ரொக்கம், ரூ.11 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றது. பின்னர் பாதிக்கப்பட்ட பெண் ஒரு வழியாக கட்டை அவிழ்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

5 கொள்ளையர்கள் கைது

இதில் கொள்ளை அடித்து சென்ற 5 பேரின் அடையாளம் தெரியவந்தது. சச்சின் ஜக்தானே, ராய்பா சவான், ரவீந்திர போசலே, துரியோதன், நிதின் மோரே என தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.76 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை பறிமுதல் செய்தனர்.

ஜோதிடர் சிக்கினார்

கொள்ளையர்களிடம் நடத்திய விசாரணையில் போலீசாருக்கு அதிர்ச்சி கலந்த சுவாரசிய தகவல் கிடைத்தது. வீடு புகுந்து கொள்ளையடிக்க சுப நேரத்தை ஜோதிடர் ஒருவர் குறித்து கொடுத்ததும், அந்த ஜோதிடர் பெயர் ராம்சந்திரா சாவ்லா என்றும் போலீசாரிடம் அவர்கள் கூறினர். இதையடுத்து கொள்ளையர்களுக்கு நல்ல நேரம் குறித்து கொடுத்த ஜோதிடரை போலீசார் பொறிவைத்து கைது செய்தனர். அதன் பின்னரே தனக்கு நேரம் சரியில்லை என்பதை ஜோதிடர் உணர்ந்தார். தற்போது அவர் சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்