போலி நகைகளை கொடுத்து வெளிநாட்டுக்காரரிடம் ரூ.10 லட்சம் பறிப்பு - ஒருவர் கைது; கூட்டாளிகள் 2 பேருக்கு வலைவீச்சு

போலி நகைகளை கொடுத்து வெளிநாட்டுக்காரரிடம் ரூ.10 லட்சம் பறித்து சென்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரது கூட்டாளிகள் 2 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2023-09-03 18:45 GMT

மும்பை, 

போலி நகைகளை கொடுத்து வெளிநாட்டுக்காரரிடம் ரூ.10 லட்சம் பறித்து சென்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரது கூட்டாளிகள் 2 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

ரூ.15 லட்சம் நகைகள்

ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர் சோரன்(வயது24). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெய்ப்பூருக்கு சுற்றுலா வந்தார். அப்போது ஜாகீர் ஹசேன் என்பவர் தனது 2 கூட்டாளிகளுடன் சோரனை அணுகினார். தங்களிடம் பழங்கால நகைகள் இருப்பதாகவும், இதனை சர்வதேச சந்தையில் விற்றால் பெரும் பணம் கிடைக்கும் என தெரிவித்தனர். இதையடுத்து சோரனிடம் ரூ.15 லட்சம் பேரம் பேசி நகைகளை கொடுத்தனர். அப்போது சோரன் தன்னிடம் தற்போது பணம் இல்லை, மும்பை வந்தால் தருவதாக கூறினார். இதன்பேரில் 3 பேரும் சோரனுடன் மும்பை வந்தனர்.

ஒருவர் கைது

இதையடுத்து ஏ.டி.எம் மையத்தில் இருந்து ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் ரொக்கம் எடுத்தும், ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள தங்க பிஸ்கட்டையும் அவர் கும்பலிடம் கொடுத்து உள்ளார். இதன் பின்னர் சோரன் அவர்களிடம் பெற்ற நகைகளை சோதித்து பார்த்தபோது, ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள போலி நகைகளை தன்னிடம் கொடுத்து விட்டு ரூ.10 லட்சத்தை கும்பல் பறித்து சென்றது தெரியவந்தது. இது பற்றி அவர் மும்பை போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து கும்பலை பிடிக்க விசாரணை நடத்தி வந்தனர். இதில் மும்பை சாந்தாகுருசில் உள்ள ஓட்டலில் ஜாகிர் ஹசேன் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். மேலும் அவரது கூட்டாளிகள் 2 பேரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்