எந்த நிர்ப்பந்தத்தின் கீழ் நீங்கள் ராகுல் காந்தியை நியாயப்படுத்த முயற்சிக்கிறீர்கள்: கார்கேவுக்கு நட்டா கடிதம்

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் காங்கிரஸ் தலைவர்களால் மோடியை அவமதித்தது போல் எந்த தலைவரும் அவமதிக்கப்படவில்லை என்று ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

Update: 2024-09-19 09:37 GMT

புதுடெல்லி,

பொதுமக்களால் பலமுறை நிராகரிக்கப்பட்ட உங்களின் தோல்வியுற்ற தயாரிப்பை மெருகேற்றும் முயற்சியில் நீங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளீர்கள் என ராகுல் காந்தி குறித்து காட்டமாக விமர்சித்து மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், "பொதுமக்களால் பலமுறை நிராகரிக்கப்பட்ட உங்களின் தோல்வியடைந்த பொருளை மெருகேற்றும் முயற்சியில் நீங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளீர்கள். அரசியல் அழுத்தம் காரணமாக அதனை சந்தைப்படுத்துகிறீர்கள். நீங்கள் எழுதிய கடிதத்தை படித்த பிறகு, அதில் நீங்கள் குறிப்பிட்ட விஷயங்களில் இருந்து வெகு தொலைவில் இருப்பதை உணர்ந்தேன். அந்தக் கடிதத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட உங்கள் தலைவர்களின் தவறுகளை நீங்கள் மறந்துவிட்டீர்கள் அல்லது வேண்டுமென்றே மறைத்துவிட்டீர்கள் என நினைக்கிறேன். ஆகவே அந்த விஷயங்களை விரிவாக உங்களது கவனத்துக்கு கொண்டு வருவது முக்கியம் என கருதுகிறேன்.

இந்திய ஜனநாயகத்தை யாரேனும் அவமதித்திருந்தால், அது காங்கிரஸ் கட்சிதான். பிரதமர் உள்பட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை 'திருடன்' என்றும் மோடிக்கு எதிராக மிகவும் அநாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்திய வரலாறு காந்திக்கு உண்டு. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் காங்கிரஸ் தலைவர்களால் மோடியை அவமதித்தது போல் எந்த தலைவரும் அவமதிக்கப்படவில்லை. எந்த நிர்ப்பந்தத்தின் கீழ் நீங்கள் ராகுல் காந்தியை நியாயப்படுத்த முயற்சிக்கிறீர்கள். காங்கிரஸ் தலைவராக இருந்தாலும் குறைந்த பட்சம் உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்திருக்க வேண்டும்" என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரதமர் உள்ளிட்ட ஒட்டுமொத்த ஓபிசி சமூகத்தையும் இழிவுபடுத்திய ஒரு நபரை ஏன் நியாயப்படுத்த முயற்சிக்கிறீர்கள் என்றும் நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்