டெல்லியில் மாற்று இடங்களில் நடப்பட்ட மரங்களில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே உயிர் பிழைத்துள்ளதாக தகவல்!

டெல்லியில் மரங்களை பிடுங்கி மாற்று இடங்களில் நட்ட பிறகு, அதன் நிலை என்ன என்பது குறித்த கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது.

Update: 2022-10-13 12:00 GMT

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் மரங்களை பிடுங்கி மாற்று இடங்களில் நட்ட பிறகு, அதன் நிலை என்ன என்பது குறித்த கணக்கெடுப்பு டேராடூனை மையமாக வைத்து இயங்கும் வன ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கியுள்ளது.

இந்த கணக்கெடுப்பு அனைத்து இடமாற்றப்பட்ட மரங்களின் உயிர்வாழ்வு விகிதம் குறித்து விவரங்களை சேகரிக்கும். முதலில் டெல்லி தெற்கு கோட்டத்தில் நடவு செய்யப்பட்ட மரங்கள் கடந்த ஒரு வார காலமாக கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன.டெல்லி அரசின் மரம் மாற்று கொள்கையின் தாக்கத்தை அறியவும் இந்த கணக்கெடுப்பு உதவும்.

டெல்லி அரசின் மரம் மாற்று கொள்கையின் படி, சம்பந்தப்பட்ட ஏஜென்சிகள் தங்கள் வளர்ச்சிப் பணிகளால் பாதிக்கப்பட்ட மரங்களில் குறைந்தபட்சம் 80 சதவீதத்தையாவது இடமாற்றம் செய்ய வேண்டும்.

மே மாதம் டெல்லி ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, தலைநகரில் கடந்த மூன்று ஆண்டுகளில், வளர்ச்சிப் பணிகளுக்காக ஓரிடத்திலிருந்து பிடுங்கி மாற்று இடங்களில் நடவு செய்யப்பட்ட 16,461 மரங்களில் மூன்றில் ஒரு பங்கு (33.33 சதவீதம்) மட்டுமே உயிர் பிழைத்துள்ளது.

2019-20ல் டெல்லி நகரத்தில் நடவு செய்யப்பட்ட 4,162 மரங்களில் 1,521 மட்டுமே உயிர் பிழைத்துள்ளன என்று வனத்துறையினர் கூறினர்.

2020-21ல் மாற்று இடங்களில் நடவு செய்யப்பட்ட 7,003 மரங்களில், 2,001 மரங்கள் (28.57 சதவீதம்) உயிர் பிழைத்தன. 2021-22ல் நடவு செய்யப்பட்ட 5,296 மரங்களில் 1,965 மரங்கள்(37.10 சதவீதம்) மட்டுமே உயிருடன் உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்