குஜராத்தில் அவலம்: திருடன் என கூறி பார்வையற்ற மாணவன் மீது சக மாணவர்கள் தாக்குதல்

குஜராத்தில் திருடன் என கூறி பார்வையற்ற மாணவன் மீது சக மாணவர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

Update: 2022-12-27 14:06 GMT



பவ்நகர்,


குஜராத்தின் பவ்நகரில் மகராஜா கிருஷ்ண குமார்சின்ஹஜி அந்த உத்யோக் ஷாலா என்ற பெயரிலான பள்ளியில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், பார்வையற்ற மாணவன் மீது பார்வையற்ற சக மாணவர்கள் திருடன் என குற்றச்சாட்டு சுமத்தி அடித்து, தாக்கியுள்ளனர். இதில் அந்த மாணவனுக்கு பின்பக்கத்தில் கடுமையான காயம் ஏற்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் விடுமுறை நாளான ஞாயிற்று கிழமை காலை நடந்துள்ளது. எனினும், அன்று மாலையே மாணவனின் தாயாருக்கு தகவல் தெரிந்து உள்ளது.

இதன்பின்னர், மாணவனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதுபற்றி மாணவனின் தாயார் கூறும்போது, ஓராண்டுக்கு முன் பள்ளியில் சேர்த்தது முதல் தொடர்ந்து, சக மாணவர்கள் துன்புறுத்தி வந்துள்ளனர்.

ஞாயிற்று கிழமை பள்ளியில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில், திருடன் என பொய்யான குற்றச்சாட்டு கூறி அவனை அடித்துள்ளனர். காலையில் சம்பவம் நடந்தபோதும், மாலையிலேயே எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என வேதனையுடன் கூறியுள்ளார்.

இதன்பின், டுவிட்டரில் மாணவனின் குடும்பத்தினர் சம்பவம் பற்றி குறிப்பிட்டு மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். உள்ளூர் மற்றும் மாநில அரசு அதிகாரிகளை டேக் செய்தபோதும் பதிலில்லை என தெரிவித்து உள்ளனர்.

இதுபற்றி பவ்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்