இங்கிலாந்தின் பிரதமராக ரிஷி சுனக் தேர்வு: இந்தியாவில் இதுபோன்று நடக்குமா? பாஜக - எதிர்க்கட்சி தலைவர்கள் இடையே வார்த்தை போர்!

ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதமராக தேர்வானது குறித்து பாஜக மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு இடையே வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது.

Update: 2022-10-25 10:50 GMT

புதுடெல்லி,

ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதமராக தேர்வானது குறித்து இந்திய அரசியலில் விவாதங்கள் தீவிரமடைந்து வருகின்றன.பாஜக மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு இடையே வார்த்தைப் போர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் பெரும்பான்மைவாதம் மற்றும் பிரிவினைவாதம் நிலவி வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆளும் பாஜக ஆட்சியை தாக்கி பேசுவதற்கு, இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக தேர்வான விஷயம் உதவியாக உள்ளது.

பிரதமராக ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவிக்கும் அதே வேளையில், பாஜகவை தாக்கியும் காங்கிரஸ் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

'இந்தியாவில் எந்த சிறுபான்மையினரும் பிரதமராக முடியுமா' என்ற கேள்வியை அரசியல் தலைவர்கள் எழுப்பியுள்ளனர்.காங்கிரஸ் எம்.பி சசி தரூரின் டுவிட்டர் பதிவிற்கு பிறகு, இந்த சலசலப்பு தொடங்கியது.

சசி தரூர் நேற்று தனது டுவிட்டர் பதிவில், "சிறுபான்மையின பிரிவை சேர்ந்த ஒருவரை மிக மிக உயரிய அரசாங்க பொறுப்பில் ந்க்கிலாந்து நாட்டினர் ஏற்றவுள்ளனர். இதன் மூலம், உலகில் மிகவும் அரிதான ஒன்றை அவர்கள் செய்திருக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

இந்தியர்கள் ரிஷி சுனக்கின் இந்த ஏற்றத்தை கொண்டாடும் அதேவேளையில், நாம் நேர்மையாக ஒரு கேள்வியை கேட்போம், 'இது போன்று இங்கே(இந்தியாவில்) நடக்குமா?'" என்று கேள்வி எழுப்பினார்.அவரது இந்த டுவீட்டை தொடர்ந்து, பல தலைவர்களின் டுவீட்கள் வெளியாகி வருகின்றன.

2004ஆம் ஆண்டில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க முற்பட்டபோது, அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி பிரதமராக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. வெளிநாட்டை பூர்விகமாக கொண்ட சோனியா காந்தி இந்திய பிரதமராக கூடாது என்று விமர்சனம் வைக்கப்பட்டது.

இது குறித்து பாஜகவின் வெளியுறவுத் துறைத் தலைவர் விஜய் சவுதைவாலே கூறுகையில், "இந்திய வம்சாவளியைக் கொண்ட இங்கிலாந்தில் பிறந்த ரிஷியையும், இத்தாலியில் பிறந்த சோனியாவையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது(ராஜீவ்காந்தி உடனான திருமணத்திற்குப் பிறகு பல ஆண்டுகளாக இந்திய குடியுரிமை பெற சோனியா மறுத்துவிட்டார்)" என்று விஜய் சவுதைவாலே தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் பிடிபி கட்சி தலைவர் மெகபூபா முப்தி சமூக வலைதளங்களில் கூறுகையில், "இங்கிலாந்தில் முதல் இந்திய வம்சாவளி பிரதமராக பதவியேற்பது பெருமையான தருணம். முழு இந்தியாவும் உண்மையிலேயே கொண்டாட வேண்டிய விஷயம்.

யுனைடெட் கிங்டம்(இங்கிலாந்து) சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக ஏற்றுக்கொண்டது நினைவுகூரத்தக்கது. மறுபுறம், என் ஆர் சி மற்றும் சி ஏ ஏ போன்ற பிளவுபடுத்தும் மற்றும் பாரபட்சமான சட்டங்களுக்கு நாங்கள் கட்டுப்பட்டுள்ளோம்" என்று பதிவிட்டார்.

மெகபூபா முப்தியின் இந்த டுவீட்டிற்கு பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் எந்த சிறுபான்மையினரையும் முதல்-மந்திரியாக ஏற்பீர்களா என்று மெகபூபா முப்தியிடம் கேட்டார்.

அவர் கூறியதாவது, "இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்து மெகபூபா முப்தியின் ட்வீட்டைப் பார்த்தேன். நீங்கள் (மெகபூபா முஃப்தி) ஜம்மு காஷ்மீரில் சிறுபான்மையினரை முதல்வராக ஏற்பீர்களா? இதற்கு தெளிவான பதில் கூறுங்கள்.

பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, சில தலைவர்கள் பெரும்பான்மைவாதத்திற்கு எதிராக தீவிரம் காட்டினர். அப்துல் கலாம் ஜனாதிபதியாகவும், மன்மோகன் சிங் 10 ஆண்டுகள் பிரதமராகவும் இருந்ததை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இதுமட்டுமின்றி, பழங்குடியினரின் தலைசிறந்த தலைவரான திரவுபதி முர்மு தற்போது நமது ஜனாதிபதியாக உள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திறமையான தலைவர் ரிஷி சுனக் பிரிட்டனின் பிரதமராகிறார். இந்த அசாதாரண வெற்றிக்காக நாம் அனைவரும் அவரைப் பாராட்ட வேண்டும். சில இந்திய அரசியல்வாதிகள் துரதிர்ஷ்டவசமாக அரசியல் நோக்கத்துக்காக சுட்டிக்காட்ட இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவது வருத்தமளிக்கிறது" என்று பதிவிட்டார்.

பாஜகவின் ஐடி துறை தலைவர் அமித் மாளவியா கூறுகையில், "இந்தியாவில் மூன்று முஸ்லிம்களும் ஒரு சீக்கியரும் ஜனாதிபதியாக இருந்துள்ளனர். இந்தியாவில் 10 ஆண்டுகளாக சீக்கிய பிரதம மந்திரி மற்றும் சிறுபான்மையினர் உயர் நீதித்துறை மற்றும் ஆயுதப்படைகளில் உள்ளனர். இந்தியா வேறு எந்த நாட்டிலிருந்தும் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம் பற்றி கற்றுக்கொள்ள வேண்டியதில்லை. ஜம்மு காஷ்மீர் முதல்வர் பதவிக்கு மெகபூபா ஒரு இந்துவை ஆதரிக்க வேண்டும்" என்று பதிவிட்டார்.

ரிஷி சுனக் பிரதமராக தேர்வானது குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது:- "முதலில் கமலா ஹாரிஸ், இப்போது ரிஷி சுனக்... அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மக்கள் தங்கள் நாடுகளின் பெரும்பான்மை அல்லாத குடிமக்களை அரவணைத்து, அரசாங்கத்தில் உயர் பதவிக்கு தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் இதிலிருந்து, இந்தியாவும், 'பெரும்பான்மைவாதத்தை கடைப்பிடிக்கும் கட்சிகளும்' கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இருக்கிறது" என்று பதிவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்