நாடு முழுவதும் 18¾ லட்சம் பேர் எழுதும் 'நீட்' தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியாக வாய்ப்பு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெற்று வருகிறது.

Update: 2022-07-11 00:25 GMT

சென்னை,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு கல்வியாண்டுக்கான மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு நீட் தேர்வு வருகிற 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த மே மாதம் 20-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. அதன்படி, நீட் தேர்வுக்கு 10 லட்சத்து 64 ஆயிரத்து 606 பெண்கள், 8 லட்சத்து 7 ஆயிரத்து 711 ஆண்கள், 12 திருநங்கைகள் என மொத்தம் 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 1 லட்சத்து 42 ஆயிரத்து 286 பேர் எழுதுகிறார்கள்.

இந்த புள்ளி விவரங்களை கடந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு அதிகமான பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் தேர்வுக்கு இன்னும் ஒருவாரமே முழுமையாக உள்ளதால், தேர்வுக்கான ஹால்டிக்கெட் எப்போது வெளியாகும்? என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் இருந்து வந்தது.

அதற்கேற்றபடி, https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் இன்று (திங்கட்கிழமை) ஹால்டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும், அதனைத்தொடர்ந்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. வழக்கமாக தேர்வு மையங்கள் அமைக்கப்படுவதில், குளறுபடிகள் இருந்து வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு தேசிய தேர்வு முகமை எப்படி தேர்வு மையங்கள் அமைத்து இருக்கின்றன? என்பது இன்று தெரிந்துவிடும்.

Tags:    

மேலும் செய்திகள்