மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்ற கணவர்... குடும்ப தகராறில் நடந்த கொடூரம்

மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்ற காபித்தோட்ட உரிமையாளர், பின்னர் போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார்.

Update: 2024-07-20 20:28 GMT

குடகு,

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட பேட்டோலி கிராமத்தில் வசித்து வந்தவர் நாயகண்ட போபண்ணா(வயது 43). காபித்தோட்ட உரிமையாளர். இவரது மனைவி ஷில்பா சேதம்மா(38). இவர்கள் இருவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பிள்ளைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றும் அவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த நாயகண்ட போபண்ணா, வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து தனது மனைவி ஷில்பா சேதம்மாவை சுட்டார். அவர் ஷில்பாவை நோக்கி 2 ரவுண்டு சுட்டார். இதில் ஷில்பாவின் உடலில் 2 குண்டுகள் பாய்ந்தது. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து துடிதுடித்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் ஷில்பா துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்ட நாயகண்ட போபண்ணா, அக்கம்பக்கத்தினரையும் துப்பாக்கியை காட்டி மிரட்டினார்.

பின்னர் அவர் துப்பாக்கியுடன் விராஜ்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். அதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை அழைத்துக் கொண்டு அவருடைய வீட்டுக்கு போலீசார் சென்றனர். அங்கு ஷில்பாவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து நாயகண்ட போபண்ணாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவியை கணவனே துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்