அமித் ஷாவின் மகன் தேசிய கொடியை வாங்க மறுத்தது ஏன்...? கேள்வி எழுப்பும் எதிர்கட்சிகள்

தேசிய கொடியை வாங்க மறுக்கும் ஜெய்ஷாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. எதிர்க்கட்சியினர் இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

Update: 2022-08-29 08:41 GMT

புதுடெல்லி:

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் துபாயில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த வெற்றியை மைதானத்தில் இருந்த ரசிகர்களும், போட்டியை டெலிவிஷனில் பார்த்த ரசிகர்களும் கொண்டாடினார்கள்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் ஜெய்ஷா இந்தப் போட்டியை நேரில் ரசித்தார். இந்தியா வெற்றி பெற்றதும் அவர் கைதட்டி ஆரவாரம் செய்தார். அப்போது ஒருவர் அவரது கையில் தேசிய கொடியை கொடுக்க வந்தார். ஆனால் ஜெய்ஷா தேசிய கொடியை வாங்க மறுத்தார். வெற்றி கொண்டாட்டத்தில் ஜெய்ஷா தேசிய கொடியை வாங்க மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஜெய்ஷா மறுக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. எதிர்க்கட்சியினர் இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள். இது தொடர்பாக ஜெய்ஷாவை பலரும் விமர்சனம் செய்கிறார்கள்.

இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த படி டி.ஆர்.எஸ். தலைவர் ஒருவர் கூறும்போது, "இதுவே பா.ஜனதாவை சேராத ஒருவர் கொடியை ஏற்க மறுத்து இருந்தால் அந்த நபர் தேச விரோதி ஆக்கப்பட்டு இருப்பார்.

நாள்முழுவதும் விவாதமாக்கப்பட்டு இருக்கும். அதிர்ஷ்டவசமாக அது அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா ஆகிவிட்டார் என கிண்டலுடன் தெரிவித்தார்.

இதே வீடியோவை மராட்டிய மாநில காங்கிரஸ் கட்சியும் பகிர்ந்துள்ளது. உள்துறை மந்திரியின் மகன் தேசிய கொடியை வாங்க மறுத்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளது.

"மூவர்ணக் கொடியிலிருந்து தங்களை விலக்கிக் கொள்ளும் அவர்களின் பழக்கம் பல தலைமுறைகளாக உள்ளது அது எப்படிப் போகும்?" என காங்கிரஸ் விமர்சித்து உள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்