கடன் வசூலிப்பு ஏஜெண்டுகள் தொல்லை: ஒரேகுடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை

கடன் வசூலிப்பு ஏஜெண்டுகள் தொல்லை கொடுத்ததால் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.

Update: 2024-09-02 16:16 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டம் சப்னவத் கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் ரானா (வயது 48). இவரது மனைவி பிரேமாவதி (வயது 45). இந்த தம்பதிக்கு பயல் என்ற மகளும் (வயது 18), 2 மகன்களும் உள்ளனர். இதனிடையே, பிள்ளைகளின் படிப்பு செலவுக்காக தனியார் வங்கியில் சஞ்சீவ் ரூ. 5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். ஆனால், வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதில் அவ்வப்போது காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், தனியார் வங்கியை சேர்ந்த கடன் வசூலிப்பு ஏஜெண்டுகள் சஞ்சீவ் வீட்டிற்கு அவ்வப்போது தொல்லை கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், கடனை திருப்பி செலுத்த காலதாமதம் ஆனதால் தனியார் வங்கியை சேர்ந்த கடன் வசூலிப்பு ஏஜெண்டுகள் சிலர் நேற்று சஞ்சீவ் வீட்டிற்கு வந்து மீண்டும் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த சஞ்சீவ் நேற்று இரவு மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து விஷம் குடித்துள்ளார். மகன்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் 3 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் தற்கொலை செய்துகொண்டவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.    

Tags:    

மேலும் செய்திகள்