சபரிமலை அய்யப்பன் கோவிலில் தரிசன நேரம் நீட்டிப்பு...!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-11 08:18 GMT

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்ட பிறகு மண்டல பூஜை இந்த ஆண்டு வெகுவிமரிசையாக நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்கள் 8 முதல் 10 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் சன்னிதானம் முதல் பம்பை வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்து நிற்கிறார்கள்.

கூட்டம் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் சூழ்நிலையே நிலவி வருகிறது. பக்தர்களின் வசதிக்காக கோவில் நடை திறப்பு நேரத்திலும் தேவஸ்தானம் மாற்றம் செய்தது. அதன்படி, அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. பிறகு மாலை 4 மணிக்கு நடை திறப்பதை ஒரு மணிநேரத்திற்கு முன்னதாக பிற்பகல் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை அடைக்கக்கப்பட்டது.

இந்த நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் சபரிமலையில் இரவு 11.30 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுள்ளது. தினசரி ஒரு லட்சம் பக்தர்கள் திரள்வதால் சாமி தரிசனம் செய்ய 10 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருப்பதை அடுத்து தேவஸ்தானம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்